Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

அதிகரிக்கும் அதிருப்தி... உட்கட்சி பூசலால் திணறும் ஹரியானா பாஜக; சமாதான முயற்சி தோல்வி

சண்டிகர்: சட்டமன்ற தேர்தல் நடைபெறும் ஹரியானாவில் பாஜகவில் உட்கட்சி பூசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிருப்தியாளர்களுடன் மேலிட தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது அக்கட்சிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தல் அக்.5ம் தேதி நடைபெற உள்ளது. 3வது முறையாக ஆட்சியை கைப்பற்ற பாஜகவும், 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை கைப்பற்ற காங்கிரசும் தவிர காட்டி வருகிறது. சட்டமன்ற தேர்தலுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்ட உடனேயே அக்கட்சிக்குள் மோதல் வெடித்துள்ளது.

67 பெயர்கள் கொண்ட பாஜகவின் முதற்கட்ட பட்டியலில் 10க்கும் மேற்பட்ட முக்கிய தலைவர்கள் பெயர்கள் விடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது சர்ச்சைக்குள்ளானது. மேலிடத்தின் நடவடிக்கையால் அதிருப்தி அடைந்த பாஜக முன்னாள் அமைச்சர் ரஞ்சித் சிங் சவுதாலா, சட்டமன்ற உறுப்பினர் லஷ்மண் தாஸ் நாபா, பாஜக விவசாயிகள் அணி தலைவர் சுக்விந்தர் செரோன், ஓபிசி அணி தலைவர் கரன்தேவ் காம்போஜ், பாஜக முக்கிய நிர்வாகியான ஷம்ஷோர் சிங் கர்காரா உள்ளிட்டோர் பாஜகவில் இருந்து அடுத்தடுத்து வெளியேறி உள்ளனர். அதிருப்தி தலைவர்களை சமாதானப்படுத்தும் பாஜகவின் முயற்சியும் தோல்வியிலேயே முடிந்துள்ளது.

பாஜக ஓபிசி அணி தலைவரை சந்திக்க சென்ற ஹரியானா முதலமைச்சருடன் கைகுலுக்க கூட அவர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதேபோல அதிருப்தி தலைவர்களை சமாதானப்படுத்தும் ஹரியானா முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டாரின் முயற்சியும் தோல்வியில் முடிந்தது. அதேநேரத்தில் கரன்தேவ் கம்போஜ் காங்கிரசில் இணைய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஹரியானா விளையாட்டுத்துறை அமைச்சர் சஞ்சய் சிங்கும் பாஜக தனக்கு வாய்ப்பு அளிக்காவிட்டால் சுயேட்சையாக களமிறங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மின்துறை அமைச்சர் ரஞ்சித் சவுதாலா தேர்தலில் போட்டியிடுவது பற்றி ஆதரவாளர்களுடன் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். பாஜக எம்.பி. நவீன் ஜிண்டாலின் தாயாரான சாவித்ரி ஜிண்டாலும், பாஜக வேட்பாளருக்கு எதிராக அதிருப்தி வேட்பாளராக களமிறங்க திட்டமிட்டு வருகிறார். சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் முக்கிய நிர்வாகிகள் தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளது அக்கட்சிக்கு நெருக்கடியை அதிகரித்துள்ளது.