Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஃபார்முலா-4 பந்தயம்: கால நீட்டிப்பு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்காக முறையீடு!

சென்னை: ஃபார்முலா-4 கார் பந்தயத்துக்கு 4 மணி நேரம் கால நீட்டிப்பு வழங்க உத்தரவிடக் கோரி அவசர வழக்காக முறையீடு செய்யப்பட்டுள்ளது. தெற்காசியாவிலேயே முதன்முறையாக நடைபெறுகிற பார்முலா 4 Chennai on Street Racing Circuit – Night Race போட்டி இன்றும், நாளையும் சென்னை தீவுத்திடல் பகுதியில் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மேற்கொண்டு வருகிறது. தீவுத்திடல், போர் நினைவு சின்னம், நேப்பியர் பாலம், சுவாமி சிவானந்தா சாலை, அண்ணா சாலை வரை 3.5 கிலோமீட்டர் போட்டிக்குரிய தூரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

19 திருப்பங்கள், அதிவேக நேர் வழிகளுடன் பந்தய பாதை அமைந்துள்ளது. இதையொட்டி சாலையின் இருபுறமும் தடுப்பு சுவருடன், கம்பி அமைக்கப்பட்டுள்ளது. வளைவுகளில் கார்களின் பாதுகாப்புக்காக நிறைய டயர்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த போட்டியை ஏறக்குறைய 9 ஆயிரம் ரசிகர்கள் நேரில் கண்டுகளிக்க உள்ளனர்.

இந்நிலையில், சென்னை தீவுத்திடலில் பார்முலா 4 கார் பந்தயம் நடத்த எஃப்.ஐ.ஏ. (FIA) சான்றிதழ் பெற கால நீட்டிப்பு கோரி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்காக முறையீடு செய்யப்பட்டுள்ளது. மழை காரணமாக எஃப்.ஐ.ஏ. சான்றிதழ் பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் 4 மணி நேர கால நீடிப்பு வழங்க தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.