Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

டொனால்ட் டிரம்ப்பை கொல்ல மீண்டும் முயற்சியா?.. துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்தவர் கைது!!

வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் பங்கேற்ற நிகழ்ச்சியில் ஏகே 47 துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5ம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மற்றும் குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் களம் காண்கின்றனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருந்த ட்ரம்பை தாமஸ் மேத்யூ க்ரூப்ஸ் என்ற இளைஞர் சுட்டார். துப்பாக்கி தோட்டா டிரம்ப்பின் வலது காதை துளைத்துக் கொண்டு சென்றது. உடனடியாக டிரம்ப் காதை பிடித்துக் கீழே குனிந்த நிலையில், காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இச்சம்பவம் அமெரிக்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நேற்று பென்சில்வேனியா நகரில் நடைபெறும் குடியரசு கட்சியின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக டொனால்ட் டிரம்ப் வருவதாக இருந்தது. அப்போது முகமூடி அணிந்து கொண்டு கையில் துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்த மர்ம நபர் ஒருவரை போலீசார் கைது செய்திருந்தனர். இன்று அப்பகுதியில் கத்தியுடன் சுற்றித்திரிந்த மர்ம நபர் ஒருவரை போலீசார் பிடிக்க முயற்சித்த போது, அவர் தப்பியோடியதால் போலீசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். அந்த நபர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் எனவும், வீடு இன்றி தெருவில் வசித்து வந்ததாகவும் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து டிரம்ப் மீது கொலை முயற்சி சம்பவங்கள் நடைபெற்று வருவது, அமெரிக்காவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.