Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகரிடம் மீண்டும் விசாரிக்க சிபிசிஐடி போலீசார் முடிவு

சென்னை : தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகரிடம் மீண்டும் விசாரிக்க சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர். கடந்த 21 ஆம் தேதி கோவை கணபதி பகுதியில் எஸ்.ஆர்.சேகர் வீட்டிற்கு சென்று சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் எஸ்.ஆர்.சேகர் பல கேள்விகளுக்கு முன்னுக்கு பின் முரணான தகவல் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஆகவே மீண்டும் எஸ்.ஆர்.சேகரிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளனர். தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் கடந்த மாதம் 19ம் தேதி நடைபெற்றது. தேர்தல் சமயத்தில் சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் கட்டுக்கட்டாக ரூ.4 கோடி சிக்கியது.

இந்த பணம் நெல்லை நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ.வுக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகரை விசாரணைக்கு ஆஜராக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால் எஸ்.ஆர்.சேகர் ஆஜராகாததால் சென்னை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் டி.எஸ்.பி. சசிதரன் தலைமையில் 20க்கும் மேற்பட்ட போலீசார் கோவையில் அவரது வீட்டிற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது ரெயிலில் சிக்கிய பணம் எங்கே இருந்து வந்தது? கட்சிக்கும், அந்த பணத்துக்கும் தொடர்பு உள்ளதா? என்பது உள்பட பல்வேறு கேள்விகளை கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு எஸ்.ஆர்.சேகர் மிகவும் பொறுமையாக பதில் அளித்துள்ளார். இந்த நிலையில் ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகரிடம் மீண்டும் விசாரிக்க சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்க்காக அவருக்கு சம்மன் அனுப்ப சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.