சட்ட விரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்த முகூர்த்த நேரத்திற்காக காத்திருக்கிறீர்களா ?: அசாம் பாஜக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி
டெல்லி : அசாம் மாநிலத்தில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றுவதற்காக முகூர்த்த நேரத்திற்காக காத்திருக்கிறீர்களா என அம்மாநில பாஜக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அசாம் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய பதிவேடு முகாமின் அடிப்படையில், அம்மாநிலத்தில் 63 பேர் வெளிநாட்டினர் தங்கி இருப்பது தெரியவந்துள்ளது. அவர்கள் சட்ட விரோதமாக வசித்து வந்ததால், மாநில அரசு அவர்களை தடுப்பு முகாம்களில் வைத்துள்ளது. இந்த நிலையில், இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில், நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், அவர்கள் வெளிநாட்டினர் என தெரிந்தும் ஏன் அவர்களை நாடு கடத்தி நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பினர். ஒருவர் வெளிநாட்டினர் என கண்டுபிடிக்கப்பட்டதும் அவரை நாடு கடத்தி விடுங்கள் என்று அரசியல் அமைப்புச் சட்டம் கூறுவதாகவும் நீதிபதிகள் சுட்டிக் காட்டினர். வெளிநாட்டினரின் முகவரி தெரியவில்லை எனக்கூறி நாடு கடத்தும் செயலை தாமதப்படுத்துவதை ஏற்க முடியாது என தெரிவித்த நீதிபதிகள், நாடு கடத்துவதற்கு முகூர்த்த நேரம் வரும் வரை காத்திருக்கிறீர்களா என கேள்வி எழுப்பினர். மேலும் வெளிநாட்டவர்களை நீண்ட நாள் தடுப்புக் காவலில் வைத்திருக்க முடியாது என்றும் 63 பேரை அவர்களது தலைநகருக்கு நாடு கடத்துங்கள் என்று உத்தரவிட்டனர்.

