Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அமெரிக்கா மீது வரிகளை குறைக்க இந்தியா தயாராக இருக்கிறது: டிரம்ப் பேச்சால் மீண்டும் சர்ச்சை!!

வாஷிங்டன்: அமெரிக்க பொருட்களுக்கான வரிகளை குறைக்க இந்தியா தயாராக இருக்கிறது என அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் எப்போது என்ன அறிவிப்பாரோ என்ற பீதியில் தான் உலக நாடுகள் இருக்கின்றன. அவர் அதிபராக பதவியேற்றதில் இருந்து வரிசையாக அறிவிப்புகளை அறிவித்து கொண்டே வருகிறார். அந்த அளவுக்கு அவரின் அறிவிப்புகள் அமெரிக்காவை மட்டுமல்ல, உலக நாடுகள் அனைத்தையுமே ஏதோ ஒருவிதத்தில் பாதித்துகொண்டே தான் இருக்கின்றன.

அந்த வகையில், இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட்டால் இரு நாடுகளுடனும் வர்த்தகம் செய்யப்போவதில்லை என்று கூறியதால் தான், இந்தியா போரைக் கைவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியது, குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், அமெரிக்க பொருள்கள் மீதான வரியை இந்தியா குறைக்கவிருப்பதாக டிரம்ப் கூறியிருப்பது, மீண்டுமொரு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக பொருளாதார நிபுணர்களும் வர்த்தகர்களும் கூறுகின்றனர். இது குறித்து செய்தி சேனலுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அளித்த பேட்டியில் கூறியதாவது;

அமெரிக்க பொருட்களுக்கான வரியை குறைக்க இந்தியா தயாராக இருக்கிறது. தடைகளை அகற்றுவதில் உறுதியாக இருக்கும் ஒரு நாட்டிற்கு இந்தியா ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையே வர்த்தகப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அவர்கள் வணிகம் செய்வதை கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக்குகிறார்கள். எல்லோரும் எங்களுடன் ஒரு ஒப்பந்தம் செய்ய விரும்புகிறார்கள். அனைவருடனும் ஒப்பந்தங்களைச் செய்ய நாங்கள் விரும்பவில்லை. நான் வர்த்தகத்தைப் பயன்படுத்தி பகையைத் தீர்த்து, சமாதானத்தை ஏற்படுத்துகிறேன். பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, அமெரிக்கா சீனா மீதான இறக்குமதி வரியை குறைத்துள்ளது. நான் சீனாவுடன் அந்த ஒப்பந்தத்தைச் செய்யவில்லை என்றால், சீனா கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறோம் என்று நான் நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.