Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

அதிமுக ஆட்சியில் ரூ.6,000 கோடி நிலக்கரி இறக்குமதி ஊழல்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

சென்னை: இந்தோனேசியாவில் இருந்து அதானி நிறுவனம் மூலம் அதிமுக ஆட்சியில் நிலக்கரி இறக்குமதி செய்ததில் நடந்த ஊழல் பற்றி அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்தோனேசியாவில் வாங்கிய நிலக்கரியை தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு 3 மடங்கு விலை அதிகமாக அதானி நிறுவனம் விற்றது அம்பலமாகியுள்ளது. 2014 ஜனவரி 9-ம் தேதி 69,925 டன் நிலக்கரியை தமிழ்நாடு மின்வாரியத்துக்காக அதானி நிறுவனம் எண்ணூர் துறைமுகத்துக்கு கொண்டு வந்தது. 2014 ஜனவரி முதல் அக்டோபர் வரை மட்டும் தலா 70,000 டன் நிலக்கரியுடன் 24 கப்பல்கள் தமிழ்நாட்டுக்கு வந்துள்ளன.

24 கப்பல்களில் கொண்டு வரப்பட்ட ஒட்டுமொத்த நிலக்கரியும் தமிழ்நாடு மின்வாரியத்துக்கே விற்பனை செய்யப்பட்டுள்ளது. போலி ஆவணங்கள் தயாரித்து நிலக்கரியை தமிழ்நாடு மின்வாரியத்துக்கு விற்றதன் மூலம் அதானி நிறுவனம் பெரும் லாபம் அடைந்தது. திட்டமிட்ட குற்றங்கள், ஊழலை அம்பலப்படுத்தும் ஓசிசிஆர்பி என்ற அமைப்பு அதானி நிறுவன நிலக்கரி ஊழலை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளது. தரம் குறைந்த நிலக்கரியை இந்தோனேசியாவில் கொள்முதல் செய்து உயர்தர நிலக்கரி என்ற பெயரில் தமிழ்நாடு அரசுக்கு அதானி நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

நிலக்கரியின் விலை, தரத்தை உயர்த்தி காட்டுவதற்காக பல்வேறு நாடுகள் வழியாக வருவதுபோல் ஆவணங்கள் தயாரித்து முறைகேடு செய்துள்ளது. இந்தோனேசியாவில் ஒரு டன் ரூ.2330 என்ற விலையில் கொள்முதல் செய்யப்பட்ட நிலக்கரி தமிழ்நாட்டுக்கு வரும்போது ஒரு டன் ரூ.7650-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விலையை உயர்த்தி காட்டுவதற்காக பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள், சிங்கப்பூர் வழியாக நிலக்கரி வந்ததாக ஆவணங்கள் தயாரித்துள்ளது. சர்வதேச அளவில் பிரபலமான பைனான்சியல் டைம்ஸ் பிரிட்டன் நாளிதழில் அதானி நிறுவன நிலக்கரி இறக்குமதி ஊழல் தொடர்பாக கட்டுரை வெளியிட்டுள்ளது. நிலக்கரி இறக்குமதி ஊழல் மூலம் தமிழ்நாடு அரசுக்கு ரூ.6,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது.

இந்தோனேசிய நிறுவனமே தமிழ்நாடு மின்வாரியம் பெயரில் நிலக்கரி அனுப்பியபோதும் நடுவில் வேறு நிறுவனம் பெயரில் பில் தயாரித்து மோசடி செய்துள்ளது. போலி பில் தயாரித்து அதானி நிறுவனம் செய்த மோசடிக்கு தமிழ்நாடு மின்வாரியமும் துணைபோனதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் நடந்த நிலக்கரி இறக்குமதி ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தக்கோரி 2018-ம் ஆண்டே அறப்போர் இயக்கம் புகார் மனு அளித்துள்ளது. எடப்பாடி முதல்வராக இருந்தபோது லஞ்ச ஒழிப்புத்துறையில் கொடுத்த புகார் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ரூ.6000 கோடி நிலக்கரி இறக்குமதி ஊழல் தொடர்பாக நடவடிக்கை எடுக்க அறப்போர் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.