Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அதிமுக மாஜி அமைச்சரின் பண்ணை வீட்டில் ரூ.200 கோடி கொள்ளை?: சமூக வலைதள பதிவால் பரபரப்பு

மதுரை: அதிமுக மாஜி அமைச்சரின் பண்ணை வீட்டில் பல கோடி ரூபாய் கொள்ளைபோனதாக சமூக வலைதளத்தில் வெளியான பதிவால் மதுரையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்தவர் ரவிக்குமார். பாஜக ஆதரவாளரான இவர், தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மதுரையைச் சேர்ந்த பாஜ வழக்கறிஞர்கள் சிலர் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவதாகவும், மதுரை அதிமுக பிரமுகர் ஒருவரின் பணத்தை ரவுடிகளை வைத்து பறித்து சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பதிவில் மேலும் கூறியிருப்பதாவது:

மதுரை மாநகர் பாஜ வழக்கறிஞர்கள் சிலர் கட்டப்பஞ்சாயத்து செய்வதும், சட்டத்திற்கு புறம்பான செயல்களை செய்வதும் வாடிக்கையாக உள்ளது. இதை தடுக்கவில்லை எனில் மதுரை பாஜகவிற்கு சங்கடங்கள் ஏற்படும். இதுமட்டும் இல்லாமல், மதுரை ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் தூய்மை பணி செய்தால் ஆர்எஸ்எஸ் காப்பாற்றும் என்ற எண்ணத்தில் பல தவறுகளை செய்யும் சுயநல வாதிகள் கட்சியை தவறான பாதைக்கு கொண்டு செல்கிறார்கள். இதை சில பாஜக தலைவர்கள் ஆதரிக்கிறார்கள். பாஜக பலர் உயிரை கொடுத்து வளர்த்த கட்சி. தற்போது கட்சி வளர்ச்சியடைந்த உடன் சிலர் ஆதாயம் தேடி பதவிக்கு வந்துள்ளனர். நேற்று மதுரை அதிமுக பிரமுகர் ஒருவரின் பல கோடி பணத்தை ரவுடிகளை வைத்து பறித்து சென்றுள்ளனர். இதனால் பாஜ, ஆர்எஸ்எஸ்-க்கு தான் கெட்ட பெயர் ஏற்படும். இப்படி பதிவிட வருத்தமாகத்தான் இருக்கிறது. எனது மகன் தவறு செய்தாலும் குற்றம், குற்றமே. இதில் யார் என்மேல் வருத்தம் கொண்டாலும் கவலையில்லை.

பாஜக நேர்மையான கட்சி என்றால் நடவடிக்கை எடு. மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். இல்லை என்றால் தகுந்த ஆதாரத்துடன் உண்மைகள் வெளிவரும். கட்சிக்கு உண்மையாக உழைப்பவர்களுக்கு மரியாதை கொடுங்கள். தகாத நபர்களுக்கு பதவியை தாரை வார்க்காதீர்கள். இது பலர் உயிர் தியாகம் செய்து வளர்த்த கட்சி. அவர்கள் ஆன்மா பார்த்து கொண்டு இருக்கிறது. இவ்வாறு பதிவில் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அதிமுகவைச் சேர்ந்த ஒருவர் கூறியதாவது: மதுரையைச் சேர்ந்த அதிமுக மாஜி அமைச்சர் ஒருவருக்கு துவரிமான் அருகே புல்லூத்து பகுதியில் பண்ணைத்தோட்டம் உள்ளது. இங்கு தான் முக்கிய ஆவணங்கள் மற்றும் பணத்தை அவர் பதுக்கி வைத்துள்ளதாகவும், இதில் பெரும் பகுதி பணம் கருப்பு பணம் என்றும் கூறப்படுகிறது.

இங்கு கருப்பு பணம் ரூ.200 ேகாடி வரை ரொக்கமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த பணத்தை வரும் சட்டமன்ற தேர்தலில் செலவிடுவதற்காக மாஜி அமைச்சர் வைத்திருந்தார். அவ்வப்போது பண்ணை வீட்டிற்கு வந்து செல்லும் மாஜி அமைச்சர், பணம் இருப்பதை உறுதி செய்துவிட்டு தான் செல்வார். கடந்த ஞாயிறன்று மதுரை முருகன் மாநாட்டில் பங்கேற்பதற்காக மாஜி அமைச்சர் சென்றிருப்பதை உறுதி செய்த மர்ம கும்பல், பெரும்பகுதி கருப்பு பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளது என்றார். மாஜி அமைச்சரின் பண்ணை வீட்டில் பதுக்கிய கருப்பு பணத்தை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றிருப்பது அதிமுக மட்டுமின்றி பாஜக வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.