புதுடெல்லி: வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, கடந்த 2024ல் மாணவர் போராட்டங்கள் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, பதவியில் இருந்து விலகி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். இந்த நிலையில் ஷேக் ஹசீனா வெளிநாட்டு செய்தியாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த ஊடக நிகழ்ச்சியில், காணொலி மூலம் நேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியது: 2024ம் ஆண்டு வலுக்கட்டாயமாக நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டேன்.
ஆனால், மக்களுடன் இணைந்து தான் உள்ளேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக பயம் காரணமாக வங்கதேசம் திணறி வருகிறது. அவர்கள் என்னைச் சிறையில் அடைக்கலாம் அல்லது கொன்றுவிடலாம் என்பது எனக்குத் தெரியும். நான் என் மக்களுடன் இருப்பதற்காக என் நாட்டி்ற்குத் திரும்பிச் செல்ல முடிவு செய்துவிட்டேன், டிசம்பரில் வங்கதேசம் செல்வேன் இது உறுதி.
இந்தியா எப்போதுமே வங்கதேசத்தின் சிறந்த நண்பனாக இருந்து வருகிறது. வங்கதேச நிலைமை மிகவும் கவலையளிப்பதாக உள்ளது. இது நாங்கள் கட்டியெழுப்பிய வங்கதேசம் அல்ல. ஜனநாயகம் மற்றும் நீதிக்கான வங்கதேச மக்கள் போராட்டத்தில் சர்வதேச சமூகம் துணை நிற்க வேண்டும். இவ்வாறு பேசினார்.
