புதுடெல்லி: மேற்கு வங்க மாநிலம் பிர்பும் மாவட்டத்தை சேர்ந்த சுனாலி கதுன், அவரது கணவர் உட்பட 6 பேர் கடந்த ஜூன் 18ம் டெல்லியில் சந்தேகத்தின் பேரில் போலீசாரால் பிடிக்கப்பட்டு, அவர்கள் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என ஜூன் 27ல் வங்கதேசத்திற்கு நாடு கடத்தப்பட்டனர். இது தொடர்பான வழக்கை விசாரித்த கொல்கத்தா உயர் நீதிமன்றம் கர்ப்பிணியாக உள்ள சுனாலி கதுன் உள்ளிட்டவர்களை மீண்டும் இந்தியா அழைத்து வர உத்தரவிட்டது.
இதை எதிர்த்து ஒன்றிய அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி ஜாய்மால்யா பாக்சி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நாடு கடத்தப்பட்ட கர்ப்பிணி பெண் மற்றும் அவரது 8 வயது குழந்தை மீண்டும் இந்தியாவுக்குள் நுழைய தலைமை நீதிபதி அனுமதி வழங்கினார்.


