Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

வாழையை வளமாக்கும் இயற்கை இடுபொருட்கள்!

தற்போது இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வு பல தரப்பினரிடையே உருவாகி இருப்பதால் மலர் வகைகளைக் கூட இயற்கை வழியில் சாகுபடி செய்ய ஆரம்பித்து விட்டார்கள். ஆனால், நாம் சாப்பிடும் உணவுப்பொருட்களுக்கு? இந்தக் கேள்வி பலருக்கும் தோன்றுகிறது. ரசாயனம் விவசாயம் எப்போதும் போல அதிக பரப்பில் செய்யப்பட்டாலும் சில விவசாயிகள் முழுக்க முழுக்க இயற்கை இடுபொருட்களையே பயன்படுத்தி மகசூல் எடுக்கிறார்கள். முக்கனிகளில் ஒன்றாக வாழையும் இப்போது பல்வேறு இடங்களில் இயற்கை முறையில் விளைவிக்கப்படுகிறது. அவ்வாறு இயற்கை முறையில் வாழை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மாதவாரி உத்தேச இடுபொருள் கொடுக்கும் விபரத்தை பட்டியலிடுகிறார் வேளாண் பொறியாளர் பிரிட்டோராஜ்.ஒவ்வொரு வாழை மரத்திற்கும் நான்கு மாதங்களுக்கு ஒருமுறை 1-3 கிலோ மட்கிய தொழுஉரம் அல்லது அரை கிலோ முதல் ஒரு கிலோ மண்புழு உரம் அடியுரமாக வைக்கலாம்.நடவு முதல் குலை தள்ளுவதற்கு ஒரு மாதம் முன்பு வரை கீழ்க்கண்ட முறைகளில் இடுபொருட்களை இடலாம்.

1 வது நாள்: 200 லிட்டர் தண்ணீரில் 1 லிட்டர் சூடோமோனஸ் அல்லது ட்ரைகோ டேர்மா விரிடி, 200 லிட்டர் ஜீவாமிர்தம், 1 லிட் பொட்டாஷ் பாக்டீரியா கலந்து ஒரு மரத்திற்கு ஒரு லிட்டர் என தரைவழி பிரித்து ஊற்றி விடலாம். 100 லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் சூடோமோனாஸ் உடன் இரண்டு லிட்டர் இஎம் கரைசல் கலந்து இலைகள் மீது தெளிக்கலாம்.

7வது நாள்: 200 லிட்டர் தண்ணீருக்கு 3-5 லிட்டர் மீன் அமிலம் அல்லது பஞ்சகவ்யா அல்லது ஈ எம் கரைசல் அல்லது ஹியூமிக் அமிலம் கலந்து செடிக்கு 1 லிட்டர் என பாசனத்தில் ஊற்றி விடலாம்.

14வது நாள்: 200 லிட்டர் ஜீவாமிர்தம் அல்லது 200 லிட்டர் தண்ணீருக்கு 3-5 லிட்டர் மீன் அமிலம் அல்லது பஞ்சகவ்யா அல்லது ஈ எம் கரைசல் கலந்து செடிக்கு 1 லிட்டர் என பாசன ஈரத்தில் ஊற்றி விடலாம். 100 லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் ஈ எம் கரைசல் கலந்து தெளிக்கலாம்.

21 வது நாள்: 200 லிட்டர் தண்ணீருக்கு 3 லிட்டர் மீன் அமிலம் அல்லது பஞ்சகவ்யா அல்லது இ எம் கரைசல் அல்லது ஹியூமிக் அமிலம் கலந்து செடிக்கு 1 லிட்டர் என பாசன ஈரத்தில் ஊற்றி விடலாம்.மாதம் ஒருமுறை 200 மரங்களுக்கு ஒரு லிட்டர் என்ற விகிதத்தில் சூடோமோனஸ் அல்லது விரிடி அல்லது பேசிலஸ் சப்ஸ்டீலஸ் கலந்து தரைவழியாக அறுவடை முடியும் வரை தொடர்ந்து கொடுக்கலாம். வாழை குலை தள்ளும் 1 மாதத்திற்கு முன்பு முதல் அறுவடை வரை மேலே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் உள்ள திரவங்களுடன் ஒரு மாதத்தின் முதல் 15 நாட்களுக்குள் 200 லிட்டர் தண்ணீரில் 1 லிட்டர் பாஸ்போ பாக்டீரியா, 1 லிட்டர் பொட்டாஷ் பாக்டீரியா, 1 லிட்டர் ஹியூமிக் அமிலம், 2 கிலோ வாம் கலந்து 200 மரங்களுக்கு, மரத்திற்கு ஒரு லிட்டர் என பிரித்துக் கொடுக்கலாம்.

அந்த மாதத்தின் 15-30 நாட்களுக்குள் 200 லிட்டர் தண்ணீருடன் ஹியூமிக் அமிலம் 1 லிட்டர், வாம் 1 லிட்டர், கடல்பாசி உரம் 1 லிட்டர், மீன் அமிலம் 3 லிட்டர் கலந்து மரத்துக்கு பாசனம் கொடுத்த ஈரத்தில் ஒரு லிட்டர் ஊற்றி விடலாம்.கடைசி இரண்டு மாதங்களில் மட்டும் மேலே கொடுத்துள்ள திரவங்களுடன் ஒரு லிட்டர் ரைசோபியம் கலந்து பயன்படுத்துவது நல்லது.வாழை அறுவடை முடியும் வரையில் குறைந்தபட்சம் தரை வழியாக இவ்வாறு கொடுப்பது நல்லது.உயிர் உரங்களை பயன்படுத்தும்போது 200 லிட்டர் தண்ணீரில் 1-2 கிலோ நாட்டுச் சர்க்கரையும் கலந்து குறைந்தபட்சம் ஆறு மணி நேரம் முதல் ஒரு நாள் வரை வைத்திருந்து பின்பு பயன்படுத்தலாம்.

வாழை குலை மீது கடைசி இரண்டு மாதங்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை 10 லிட்டர் தண்ணீரில் 200 மில்லி மேம்படுத்தப்பட்ட பஞ்சகவ்யா அல்லது 100 மில்லி திராட்சை உரம் கரைசல் கலந்து தெளிக்கலாம்.இது ஒரு உத்தேச அட்டவணைதான். உங்கள் வசதி மற்றும் தேவைக்கேற்ப இதனை மாற்றிக்கொள்ளலாம்.

தொடர்புக்கு:

வேளாண் பொறியாளர்

பிரிட்டோ ராஜ்: 99444 50552.