சென்னை: தடையை மீறி பேரணி செல்ல முயன்ற விவகாரத்தில், புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி உட்பட 689 பேர் மீது எழும்பூர் போலீசார் 5 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு அரசாணையை ரத்து செய்யவும், மஞ்சோலை மக்களின் வாழ்வாதாரத்தை மாஞ்சோலையிலேயே நிலை நாட்ட வேண்டும் என்பது உட்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி சார்பில் எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நேற்று முன்தினம் பேரணியாக செல்ல முயன்றனர்.
ஆனால் மழை காரணமாக பேரணி நடத்த காலத்தாமதம் ஆனது. இதனால் போலீசார் பேரணிக்கு திடீர் தடை விதித்தனர். பேரணியை தலைமை ஏற்று நடத்த வந்த புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் அவர், சாலையிலேயே படுத்து தனது கட்சியனருடன் மறியலிலும் ஈடுபட்டார். இதையடுத்து போலீசார் டாக்டர் கிருஷ்ணசாமி உட்பட அனைவரையும் குண்டு கட்டாக கைது செய்து பேருந்தில் ஏற்றினர்.
பிறகு அனைவரையும் கைது செய்து சமூதாய நல கூடங்களில் அடைத்து வைத்து பிறகு மாலை விடுவித்தனர். இதற்கிடையே போலீசாரின் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட புதிய தமிழக கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி உட்பட 689 பேர் மீது தடையை மீறி ஒன்று கூடுதல், அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தது உட்பட 5 சட்டப்பிரிவுகளின் கீழ் எழும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


