Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆஸி மகளிருடன் மல்லுக்கட்டு பெர்த் டெஸ்டில் இன்று கெத்து காட்டுமா இந்தியா?

பெர்த்: இந்திய மகளிர் - ஆஸி மகளிர் அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டி, பெர்த் நகரில் இன்று துவங்குகிறது.  இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்று, 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி தோல்வியை தழுவியது. அதைத் தொடர்ந்து இரு அணிகள் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி பெர்த் நகரில் இன்று துவங்குகிறது. 5 ஆண்டுக்கு பின் முதல் முறையாக, இந்த அணிகள் இடையே இப்போட்டி பகல்-இரவு போட்டியாக நடத்தப்படுகிறது.

இதற்கு முன், இந்திய அணி கடைசியாக தான் எதிர்கொண்ட 5 டெஸ்ட் போட்டிகளிலும் அபார வெற்றி பெற்றுள்ளதால், இன்றைய போட்டியை அதீத நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும். அதேசமயம், அந்த போட்டிகள் அனைத்தும் இந்தியாவில் நடந்தவை என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இந்திய மகளிர் அணி, வெளிநாடுகளில் எதிர்கொண்ட, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரு டெஸ்ட் போட்டிகள் டிராவில் முடிந்தன.

ஆஸி அணிக்கு எதிராக, 2021ல் செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா அட்டகாசமாக சதம் அடித்து அசத்தியிருந்தார். ஆஸிக்கு எதிராக தற்போது நடந்து வரும் போட்டிகளில் டி20 தொடரில் இந்திய அணி வெற்றி கண்டது. அதேசமயம் 3 ஒரு நாள் போட்டிகளிலும் தோல்வியை தழுவியது. இதன் மூலம், 8-4 என்ற புள்ளிக் கணக்கில் இத் தொடர்களில் ஆஸி முன்னிலை வகிக்கிறது. இன்று துவங்கும் டெஸ்ட் போட்டியில் வெல்லும் அணிக்கு 4 புள்ளிகள் கிடைக்கும்.

இப்போட்டியில் ஆஸி வென்றால் 12 புள்ளிகளுடன் ஒட்டு மொத்தமாக வெற்றி பெற்ற அணியாக உருவெடுக்கும். மாறாக, இந்தியா வென்றால், 8-8 என்ற புள்ளிக் கணக்கில் ஒட்டு மொத்தமாக சமன் செய்ய வழிவகுக்கும். இந்திய அணியில் கேப்டன் ஹர்மன்பிரித் கவுர், துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிகஸ், தீப்தி சர்மா போன்ற சீனியர் வீராங்கனைகளுக்கு, இன்று துவங்கும் போட்டியில் சிறப்பாக வழிநடத்திச் செல்ல வேண்டிய பொறுப்பு அதிகமாக இருக்கும். சமீப காலமாக ஸ்டைலான பேட்டிங்கை வெளிப்படுத்தி வரும் பிரதிகா ராவலுக்கு இன்றைய போட்டி முதல் போட்டியாக அமையும்.

ஆஸி அணியின் கேப்டன் ஆலிஸா ஹீலி, இன்றைய போட்டியுடன் ஓய்வு பெறுகிறார். எனவே அவருக்க, மறக்க முடியாத வெற்றி பரிசை வழங்க வேண்டும் என்ற துடிப்புடன் ஆஸி வீராங்கனைகள் ஆடுவர். ஆஸி அணியில் அன்கேப்டு வீராங்கனைகளாக ராச்சல் டிரெனமேன், மெய்ட்லன் பிரவுன் சேர்க்கப்பட்டுள்ளனர். அந்த அணியின் ஆஷ்லே கார்ட்னர், போப் லிட்ச்பீல்ட், அலானா கிங் பக்க பலமாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.