கடமலை-மயிலை ஒன்றியத்தில் கத்தரிக்காய் விளைச்சல் அமோகம்: நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி
வருசநாடு: கடமலை-மயிலை ஒன்றியத்தில் கத்தரிக்காய் விளைச்சல் அமோகமாக உள்ளது. வாரச்சந்தைகளில் கிலோ ரூ.35க்கு கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தேனி மாவட்டம், கடமலை-மயிலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கண்டமனூர், அண்ணா நகர், அய்யனார்கோவில், கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, மண்ணூத்து, சிறப்பாறை, வண்ணாத்திப்பாறை, வாலிப்பாறை, வருசநாடு, சிங்கராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் கத்தரிக்காய் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு விளையும் கத்தரிக்காய்களை மதுரை, தேனி, ஆண்டிபட்டி, கம்பம் சின்னமனூர், திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட வாரச்சந்தைகளுக்கு விவசாயிகள் அனுப்பி வருகின்றனர்.
இந்தாண்டு உரிய நேரத்தில் மழை பெய்ததால் மகசூல் அதிகரித்துள்ளது. மேலும், வாரச்சந்தைகளில் கத்தரிக்காய் கிலோ ரூ.35க்கு கொள்முதல் செய்யப்படுவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில், கத்தரி விவசாயத்துக்கு தேவையான பூச்சி மருந்து, உரம் ஆகியவற்றை வேளாண்மைத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் மானிய விலையில் தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘இந்தாண்டு உரிய நேரத்தில் பெய்த மழையால் கத்தரிக்காய் நல்ல விளைச்சல் கண்டுள்ளது. வாரச்சந்தைகளில் கொள்முதல் விலை கிலோவுக்கு ரூ.30 முதல் ரூ.35 வரை விற்பனையாகிறது. இதனால், மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.