நாகான்: அசாமில் சிஆர்பிஎப் அதிகாரி ஒருவர் சகவீரர்கள் இரண்டு பேரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு தானும் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அசாமின் நாகான் மாவட்டத்தில் கதிமாரியில் உள்ள சிஆர்பிஎப்-ன் 34வது பட்டாலியன் முகாமில் காலை ஏஎஸ்ஐ பல்லானி பிரேமபரம் பணியில் இருந்தார் . காலை 7மணியளவில் திடீரென அவர் தனது துப்பாக்கியை எடுத்து சக வீரர்கள் இருவரை சுட்டுக்கொன்றார்.
மேலும் ஒருவர் மீது துப்பாக்கி சூடு நடத்திய நிலையில் அவர் காயமடைந்தார். இதனை தொடர்ந்து ஏஎஸ்ஐ பல்லானி தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த தகவலின்பேரில் மூத்த சிஆர்எபிஎப் அதிகாரிகள் முகாமுக்கு விரைந்தனர். இந்த சம்பவம் குறித்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து நாகான் காவல்துறை கண்காணிப்பாளர் பார்த்தா ப்ரோதிம் தாஸ் கூறுகையில், ஆந்திராவை சேர்ந்த ஏஎஸ்ஐ பிரேமபரம் பணியில் இருந்தபோது அவருக்கு ஒதுக்கப்பட்ட ஆயுதம் இல்லாமல் இருந்துள்ளார். பின்னர் அவர் கார்ட் அறைக்கு சென்று ஐஎன்எஸ்ஏஎஸ் ரகத் துப்பாக்கியை எடுத்துகொண்டு வந்து வீரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்” என்றார். துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்கள் பாகேல் மற்றும் யாதவ் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. காயமடைந்த வீரர் கோவிந்த் ஸ்ரீபுல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


