Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்தின் ஐந்தாம் கட்டப் பயணம் திருத்தணியில் தொடக்கம்.. 1,008 மூத்த குடிமக்கள் பயன்பெற்றுள்ளனர்!!

சென்னை: அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்தின் ஐந்தாம் கட்டப் பயணம் திருத்தணியில் தொடங்கியது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்தின் ஐந்தாம் கட்டப் பயணத்தில் பங்கேற்ற 195 மூத்த குடிமக்கள் திருத்தணி, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்து பழனிக்கு புறப்பட்டனர்.

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மானசரோவர் மற்றும் முக்திநாத் ஆகியவற்றிற்கு ஆன்மிகப் பயணம் சென்று வருபவர்களுக்கு ஆண்டுதோறும் மானியம் வழங்கப்பட்டும், ஆடி மாதத்தில் அம்மன் திருக்கோயில்களுக்கும், புரட்டாசி மாதத்தில் வைணவத் திருக்கோயில்களுக்கும், இராமேசுவரத்திலிருந்து காசிக்கும், அறுபடை வீடுகளுக்கும் மூத்த குடிமக்கள் ஆன்மிகப் பயணமாக கட்டணமில்லாமல் அழைத்துச் செல்லப்பட்டு வருகின்றனர்.

தமிழ் கடவுள் என்று போற்றப்படுகின்ற முருகப் பெருமான் வீற்றிருக்கும் அறுபடை வீடுகளுக்கு 1,000 மூத்த குடிமக்களை கட்டணமில்லாமல் அழைத்து செல்ல திட்டமிடப்பட்டு முதற்கட்டப் பயணம் சென்னை, கந்தக்கோட்டத்திலிருந்தும், இரண்டாம் கட்டப் பயணம் பழனியிலிருந்தும், மூன்றாம் கட்டப் பயணம் திருச்செந்தூரிலிருந்தும், நான்காம் கட்டப் பயணம் சுவாமிமலையிலிருந்தும் புறப்பட்டன. அதனைத் தொடர்ந்து, கடலூர், சேலம், விழுப்புரம், சென்னை, திருவண்ணாமலை மண்டலங்களைச் சேர்ந்த 195 மூத்த குடிமக்கள் பயன்பெறும் வகையில் ஐந்தாம் கட்ட அறுபடை வீடு ஆன்மிகப் பயணம் திருத்தணியிலிருந்து சுவாமி தரிசனம் செய்து இன்று காலை பழனிக்கு புறப்பட்டனர்.

இக்குழுவினர் திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை, திருச்செந்தூர் ஆகியவற்றிற்கு சென்று சுவாமிமலையில் ஆன்மிகப் பயணத்தை நிறைவு செய்கின்றனர். இந்த ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்கும் மூத்த குடிமக்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவு வசதிகளுடன், பயணவழிப் பைகளும் வழங்கப்படுகின்றன. மேலும், அவர்களுக்கு உதவியாக செயல் அலுவலர்கள், திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் மருத்துவ குழுவினரும் உடன் செல்கின்றனர். அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்தில் 5 கட்டப் பயணங்களில் 1,008 மூத்தக் குடிமக்கள் பயன்பெற்றுள்ளனர்.