சென்னை: தமிழ்நாடு முழுவதும் அரசுக் கலை மற்றும் அறிவியல் படிப்பில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கி மாணவர் சேர்க்கை நடைபெற்றது. முதல்கட்டமாக சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு தமிழகம் முழுவதும் அனைத்து அரசு கலை அறிவியல் கல்லூரிகளிலும் நேற்று தொடங்கியது. காலை 9 மணிக்கு தொடங்கிய கலந்தாய்வு மாலை 6 மணிக்கு மேல் நீடித்தது. நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள் தங்கள் பெற்றோர்களுடன் கலந்துகொண்டு தங்களுக்கான துறையை தேர்ந்தெடுத்தனர். சென்னை மாநில கல்லூரியில் சிறப்பு பிரிவினருக்கு மொத்தமுள்ள 198 இடங்களில் நேற்று நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு சேர்க்கை ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டு அவர்கள் உடனடியாக கட்டணத்தை செலுத்தி சேர்ந்துள்ளதாக அக்கல்லூரியின் முதல்வர் ராமன் தெரிவித்தார். சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு இன்றுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நாளை முதல் 14ம் தேதி வரை நடைபெற உள்ளது.
Advertisement

