அரக்கு மலைக்கிராம அரசு மருத்துவமனையில் திருட்டு: உறங்கிக் கொண்டிருந்தோரின் செல்போன் திருடும் காட்சிகளால் பரபரப்பு!
அமராவதி: ஆந்திர மாநிலம் அரக்கு மலை கிராமத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் உறங்கி கொண்டிருக்கும் நோயாளிகளின் செல்போன்களை மர்ம நபர் ஒருவர் திருடி செல்லக்கூடிய காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் அல்லூர் சீதாராம இராஜூ மாவட்டம் அரக்கு மலை கிராமத்தில் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரக்கூடிய நோயாளிகள் நேற்று இரவு தூங்கி கொண்டிருந்தபோது, நள்ளிரவு வந்த மர்ம நபர் ஒருவர் நோயாளிகள் அனைவரும் தூங்கி விட்டார்கள் என நோட்டமிட்டுள்ளார்.
அதன் பிறகு நோயாளி ஒருவர் தனது அருகில் தனது செல்போனுக்கு சார்ஜ் போட்டு வைத்துள்ளார். இதனை பார்த்த மர்மநபர் அதனை திருடி சென்றுள்ளார். இதனை சிறிது நேரத்திற்கு பின் கவனித்த நோயாளி, உறவினரிடம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளை பார்த்த போது மர்ம நபர் செல்போனை எடுத்து சென்றது தெரியவந்தது. அரசு மருத்துவமனையில் செல்போன் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக நோயாளிகள் போலீசிடம் புகார் அளித்த நிலையில், சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் மர்ம நபரை தேடி வருகின்றனர்.