புதுடெல்லி: இந்திய அணி முன்னாள் வீரரும் பேட்டிங் பயிற்சியாளருமான சஞ்சய் பாங்கருக்குப் பிறந்தவர் அனயா பாங்கர். திருநங்கையான இவர் தொடக்கத்தில் மும்பையில் பிரபல வீரர் சர்பராஸ் கான், அவரது சகோதரர் முஷீர் கான் போன்றவர்களுடன் இணைந்து ஆண்களுக்கான உள்ளூர் போட்டிகளில் விளையாடி வந்தார். சமீபத்தில் தாய்லாந்தில் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட அனயா (25 வயது), இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் மகளிர் போட்டிகளில் பங்கேற்க அனுமதி கோரி கிரிக்கெட் வாரியத்துக்கு கடிதம் அனுப்பினார். பிசிசிஐயிடமிருந்து எந்த தகவலும் வராததால், கிரிக்கெட் ஆஸ்திரேலியாவை அணுகினார்.
இதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவில் நடக்கும் உள்ளூர் மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட அனயாவுக்கு அழைப்பு விடுத்துள்ள ஆஸி. வாரியம், மார்ச் 2027 வரை மாநில, மாகாண அளவிலான போட்டிகளில் பங்கேற்க அனுமதி அளித்துள்ளது. அதன் பிறகு முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்றால், டெஸ்டோஸ்டிரோன் சீரம் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்குள்ளாக இருப்பதை நிரூபிக்க வேண்டும் என நிபந்தனையும் விதித்துள்ளது.
இதனால், அனயா விரைவில் பிக் பாஷ் மகளிர் டி20 தொடரில் கூட விளையாடுவதற்கான வாய்ப்பு உருவாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், ‘கிரிக்கெட் ஆஸி. நிர்வாகம் அனயாவுக்கு அனுமதி உள்ளது கேலிக்கூத்தானது. திருநங்கையரை மகளிர் போட்டிகளில் விளையாட அனுமதிக்கக் கூடாது’ என்று தென் ஆப்ரிக்க நட்சத்திர வீராங்கனை மரிஸன்னே காப் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




