ஆண்டிபட்டி, டிச.19: ஆண்டிபட்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த மழை காரணமாக கருங்குளம் - செங்குளம் கண்மாய் முழுவதுமாக நிரம்பியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆண்டிபட்டி அருகே உள்ள குன்னூர் பகுதியில் பொதுபணித்துறைக்கு சொந்தமான கருங்குளம் - செங்குளம் கண்மாய் உள்ளது. சுமார் 80 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த கண்மாயில் கடந்த ஒரு மாத காலமாக நீர்வரத்து குறைவாக காணப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழையால் மூல வைகை ஆறு, அம்பாசமுத்திரம் ஆறு உள்ளிட்ட ஆறுகளில் தொடர்ந்து நீர்வரத்து ஏற்பட்டு கருங்குளம் - செங்குளம் கண்மாய் முழுவதுமாக நிரம்பியது.
இதனால் மதகு பகுதியில் தண்ணீர், மறுகால் பாய்ந்து ஓடுவதன் காரணமாக குன்னூர், அரபடித்தேவன்பட்டி பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு போதிய தண்ணீர் பாசனத்திற்கு கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது. இதனால் அம்மச்சியாபுரம், குன்னூர் பகுதியில் உள்ள நெல், வாழை உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறுவதால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
