திருமலை: தாய், தம்பியை சரமாரி குத்தி கொன்ற வாலிபர், போலீசுக்கு போன் செய்து காத்திருந்து கைதான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் பீமாவரம் நகரில் ரெஸ்ட் ஹவுஸ் சாலை பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீராமுலு, பைனான்சியர். இவரது மனைவி மகாலட்சுமி (60). மகன்கள் ஸ்ரீனிவாஸ் (37), ரவிதேஜா (33). மேலும் ஒரு மகள் உள்ளார். மகள் திருமணமாகி பெங்களூரில் கணவருடன் வசிக்கிறார். கொரோனா தொற்று காலத்தில் ஸ்ரீராமுலு இறந்துவிட்டார்.
இந்நிலையில் மகாலட்சுமி குடும்பத்தினர் நடத்தி வந்த பைனான்ஸ் தொழில் பாதிக்கப்பட்டதால் தங்களுக்கு சொந்தமான வீடுகள், கடைகளின் வாடகை வைத்து குடும்பம் நடத்தி வந்தனர். ஆனால் போதிய அளவு வருமானம் இல்லாததால் ஸ்ரீனிவாஸ் மனநோயாளி போல் இருந்துள்ளார். இதனால் அவரை வெளியே எங்கேயும் செல்ல அனுமதிக்கவில்லையாம். நேற்று முன்தினம் அதிகாலை, ஸ்ரீனிவாஸ் தனது தாய் மகாலட்சுமி, தம்பி ரவிதேஜாவை கத்தியால் சரமாரி குத்தி கொலை செய்துள்ளார்.
பின்னர் போலீசாருக்கு போன் செய்து, தனது தாயையும் சகோதரனையும் கொன்றுவிட்டதாக கூறியுள்ளார். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். ரவிதேஜா, மகாலட்சுமி ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தனர். அவர்கள் உடலில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்துள்ளது. அப்போது மாடியில் இருந்து கத்தியுடன் இறங்கி வந்த ஸ்ரீனிவாஸை ேபாலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ஸ்ரீனிவாஸ் மனநிலை சரியில்லாத நிலையில், கொலைகளை செய்துள்ளார் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முழு விசாரணை நடத்தப்பட்டு அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
18 ஆண்டுகள் துன்புறுத்தல்;
தாய், தம்பியை கொலை செய்த பிறகு ஸ்ரீனிவாஸ் போலீசாரிடம் பேசியதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், ‘எனது தாய் மகாலட்சுமி மற்றும் சகோதரர் ரவிதேஜாவை நானே கொலை செய்தேன். அவர்கள் இறந்த பிறகும், பேய்களாக மாறி என்னை துன்புறுத்துகின்றனர். நான் என்ன செய்தாலும் என் அம்மாவும் தம்பியும் முன்கூட்டியே தெரிந்து கொள்வார்கள். அவர்கள் மனிதர்கள் அல்ல. அவர்கள் பேய்கள். 18 வருடங்களாக என்னை துன்புறுத்தி வந்தார்கள். அதனால்தான் அவர்களை கொன்றேன்’ என பேசியுள்ளார். ஸ்ரீனிவாஸ் கூறியதை வைத்து அவரது மனநிலை பாதிக்கப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
