Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கில் திரண்டனர் ஆந்திர கோயில் நெரிசலில் சிக்கி 8 பெண்கள் உட்பட 9 பேர் பலி: 31 பக்தர்கள் படுகாயம் பலரது நிலைமை கவலைக்கிடம்

திருமலை: ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம் பலாசா காசிபுக்கா வெங்கடேஸ்வர சுவாமி கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு சிறுவன் மற்றும் 8 பெண்கள் என மொத்தம் 9 பேர் பலியான சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 31 பக்தர்கள் படுகாயடைந்துள்ளனர். பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம் பலாசா நகரை சேர்ந்தவர் ஹரிமுகுந்த பாண்டா(94). இவர் 13 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றார்.

அப்போது மணிக்கணக்கில் காத்திருந்து கோயிலுக்குள் மூலவரை தரிசனம் செய்ய கருவறை அருகே சென்றபோது தனக்கு 75 வயதிற்கு மேல் ஆவதால் ஒரு நிமிடம் சுவாமியை தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் எனக் கூறினார். ஆனால் அங்கு பணியில் இருந்த பாதுகாவலர்கள் அவரை வரிசையில் வழக்கமான பாணியில் தள்ளி விட்டனர். இதனால் அவர் விரக்தியுடன் வீடு திரும்பினர். தனக்கு நடந்த அனுபவத்தை தனது தாயாரிடம் பகிர்ந்து கொண்ட அவர், தான் இருக்கும் இடத்திலேயே பெருமாளுக்கு கோயில் கட்ட முடிவெடுத்தார்.

அதன்படி, தனக்கு சொந்தமான காசிபுக்கா- பலாசா இடையே தனது குடும்பத்துக்கு சொந்தமான 100 ஏக்கர் நிலத்தில் தென்னந்தோப்பு மத்தியில் 12.40 ஏக்கர் பரப்பளவில் ரூ.10 கோடியில் திருப்பதி வெங்கடேஸ்வர சுவாமிக்கு பூதேவி, ஸ்ரீதேவி சமேதராக ஒரே கல்லில் மூலவரை வடித்து கோயில் கட்டி சில ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடத்தினார். அத்துடன் நவக்கிரக தெய்வங்களுடன், அனைத்து தெய்வங்களின் சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. தற்போது இக்கோயிலுக்கு ஸ்ரீகாகுளம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து திரும்புகின்றனர்.

இந்த கோயிலில் நேற்று முன்தினம் மாதாந்திர ஏகாதசியுடன், நேற்று சனிக்கிழமையுடன் வெங்கடேஸ்வர சுவாமிக்கு கண்திறப்பு விசேஷம் என்பதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். சுவாமி தரிசனம் செய்வதற்காக வரிசையில் சென்றவர்கள் மத்தியில் திடீரென ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் ஒருவர் மீது அங்கிருந்த தடுப்பு கம்பி விழுந்தது. இதில் நிலை தடுமாறி அவர் சாய்ந்ததில், ஒருவர் பின் ஒருவராக கீழே விழுந்தனர். இதில் ஏற்பட்ட நெரிசலில் மூச்சுத்திணறியும், பக்தர்களால் மிதிப்பட்டும் ஒரு சிறுவன், 8 பெண்கள் என 9 பேர் பலியாகினர். 31 பேர் படுகாயமடைந்தனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு உடனடியாக ஸ்ரீகாகுளம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த 31 பேரில் மேலும் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து பலாசா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆந்திர மாநிலத்தில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து அறிந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடு இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்ததுடன், சிகிச்சை பெற்று வருபவர்களின் நிலை குறித்து மருத்துவமனையை தொடர்பு கொண்டு விசாரணை மேற்கொண்டு உரிய சிகிச்சையை வழங்கும்படி உத்தரவிட்டுள்ளார்.

* ரூ.15 லட்சம் நிவாரணம்

கோயில் விபத்து மற்றும் பலி குறித்து, முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியதாவது: இந்த சம்பவத்திற்கு காரணமான கோயில் நிர்வாகியை கைது செய்து அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். விபத்து நடந்த கோயிலில் ஒன்றிய அமைச்சர் ராம்மோகன்நாயுடு, மாநில உள்துறை அமைச்சர் அனிதாவுடன், அமைச்சர் நாரா லோகேஷ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.15 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.3 லட்சமும் வழங்கப்படும் என்று நாரா லோகேஷ் அறிவித்தார்.

* உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு

ரூ.2 லட்சம் நிவாரணம்- பிரதமர்

கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி தனது எக்ஸ்தள பக்கத்தில் இரங்கல் தெரிவித்ததுடன், இச்சம்பவத்தில் உயிரிழந்த 10 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.50 ஆயிரமும் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.

* இவ்வளவு கூட்டத்தை எதிர்பார்க்கவில்லை -கோயில் நிர்வாகி

இதுகுறித்து கோயில் கட்டிய ஹரிமுகுந்த பாண்டா கூறுகையில், ‘வழக்கமாக 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் பக்தர்கள் வந்து வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து செல்வார்கள். ஆனால் நேற்று திடீரென அதிகளவு கூட்டம் வரும் என்று எனக்கு தெரியாது. இதில் 94 வயதுடைய நான் என்ன செய்ய முடியும். போலீசாருக்கோ, அரசுக்கோ முன்கூட்டியே கூட்டம் வரும் என்று நான் கூறவில்லை’ என கூறினார்.