Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அம்ரித் பாரத் திட்டத்தில் பணி முடிந்த ஒரு மாதத்தில் அசம்பாவிதம் சேலம் ரயில் நிலைய மேற்கூரை இடிந்தது: பயணிகள் இல்லாததால் உயிர்சேதம் தவிர்ப்பு

சேலம்: சேலம் ஜங்ஷன் ரயில்வே நிலையத்தை மேம்படுத்த அம்ரித் பாரத் திட்டத்தில் ரூ.45 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்த நிதியை கொண்டு, ரயில்வே நிலையத்தில் புதிய கட்டுமானங்கள், நடைமேம்பாலம், பயணிகளுக்கான கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ரயில் நிலையத்தின் முன்பகுதியை அழகுப்படுத்தும் வகையில், புதிய போர்டிகோ கட்டப்பட்டது. இதன் உள்பகுதியில் பால் சீலிங் அமைத்தனர். இப்பணி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் நிறைவடைந்தது. தொடர்ந்து, அந்த பால் சீலிங்கில் சிறிய அளவிலான பணிகளை கட்டுமான தொழிலாளர்கள் செய்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை 5.15 மணியளவில் திடீரென புதிய போர்டிகோவின் பால் சீலிங் முழுமையாக பெயர்ந்து விழுந்தது. பெரிய அளவில் சாய்ந்து விழுந்ததால், பயங்கர சத்தம் கேட்டது. அந்த போர்டிகோ பகுதியில் பயணிகள் யாரும் இல்லாததால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. உள்பகுதியில் நின்றிருந்த பயணிகள், சீலிங் பெயர்ந்து விழுவதை பார்த்து ஓட்டம் பிடித்தனர். பின்னர், அங்கிருந்த ரயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் ஆர்பிஎப் போலீசார் வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். கட்டுமான பணியில் இருந்த தொழிலாளர்களும் வந்து பெயர்ந்து விழுந்த பால் சீலிங்கை அப்புறப்படுத்தினர். பணி நிறைவு பெற்று ஒரு மாதத்திற்குள் முழுமையாக பெயர்ந்து விழுந்ததால், பயணிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.