வாஷிங்டன்: அமெரிக்காவில் அதிபராக டிரம்ப் பதவியேற்றது முதலே ஹெச்-1பி விசா திட்டத்தைக் கடுமையாக எதிர்த்து வந்தார். ஹெச்-1பி விசாவுக்கான கட்டணத்தை கூட அவர் கடுமையாக உயர்த்தியிருந்தார். இதனால் இந்தியர்களே அதிகம் பாதிக்கப்படும் சூழல் உருவாகி இருந்தது. மேலும், அமெரிக்காவும் விசாவுக்கு கெடுபிடி காட்ட ஆரம்பித்தது. இதனால் பல்வேறு நிறுவனங்களும் தங்கள் ஹெச்-1பி விசா விண்ணப்பங்களைக் கூட குறைத்துக் கொண்டன. ஹெச்-1பி விசாவுக்கு டிரம்ப் மேலும் கூடுதல் கட்டுப்பாடுகளைக் கூட விதிக்கலாம் எனச் சொல்லப்பட்டு வந்த நிலையில், ஹெச்1-பி விசாவுக்கு ஆதரவாக அவர் பேசியது கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த விசா திட்டத்தால் அதிகம் பலன் பெறுவது இந்தியர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஹெச்-1பி நடைமுறையில் தனது முடிவிலிருந்து அமெரிக்க அதிபர் டிரம்ப் பின்வாங்கி உள்ளார். இதுதொடர்பாக தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர்; அப்போது ஹெச்1-பி விசா திட்டத்தால் அமெரிக்கத் தொழிலாளர்களின் ஊதியங்கள் குறையுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த டிரம்ப், ஆம், இதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் நாம் திறமையான ஊழியர்களை இங்குக் கொண்டுவர வேண்டும் என்றார்.
அப்போது குறுக்கிட்ட செய்தியாளர் அமெரிக்கர்களிடன் திறன் இல்லை என்று எப்படி கூறுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பியபோது, இல்லை.. அப்படி பொதுவாகச் சொல்லிவிட முடியாது. சிக்கலான, பல உயர் தொழில்நுட்பப் பணிகளுக்குத் தேவையான திறமையான பணியாளர்கள் அமெரிக்காவில் இல்லை. அமெரிக்கர்கள் அதை எல்லாம் கற்றுக் கொள்ள வேண்டும். வேலையில்லாமல் இருப்போரை உடனடியாக ராக்கெட் தயாரிக்கும் தொழிற்சாலையில் நியமிக்க முடியாது. படிப்படியாகவே முன்னேற்ற வேண்டும். உலகம் முழுவதிலும் இருந்து திறமையானவர்களை அமெரிக்கா ஈர்ப்பது மிக அவசியம் என்று டிரம்ப் கூறினார்.
