அமெரிக்காவுக்கு ரூ.3510 கோடி ஏற்றுமதி இந்தியாவில் இருந்து அரிசி வரக்கூடாது: டிரம்ப் கடும் எச்சரிக்கை
வாஷிங்டன்: அமெரிக்கச் சந்தையில் இந்திய அரிசி குறைந்த விலையில் கிடைப்பதாக அந்நாட்டு விவசாயிகள் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர். வெள்ளை மாளிகையில் விவசாயம் மற்றும் விவசாயத் துறையின் பிரதிநிதிகள் மற்றும் கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட் மற்றும் விவசாய செயலாளர் ப்ரூக் ரோலின்ஸ் உள்ளிட்ட அமைச்சரவையின் முக்கிய உறுப்பினர்களுடன் அதிபர் டிரம்ப் ஒரு வட்டமேசைக் கூட்டத்தை நடத்தினார்.
அப்போது அமெரிக்க விவசாயிகளுக்கு ரூ.1. லட்சம் கோடி நிதி உதவியை அறிவித்தார். அப்போது லூசியானாவில் கென்னடி ரைஸ் மில் நடத்தும் மெரில் கென்னடி, நாட்டின் தெற்குப் பகுதியில் அரிசி உற்பத்தியாளர்கள் உண்மையிலேயே சிரமப்படுகிறார்கள் என்றும், மற்ற நாடுகள் அமெரிக்காவிற்கு அரிசியை கொண்டு குவிக்கின்றன என்றும் டிரம்பிடம் கூறினார். எந்த நாடுகள் அமெரிக்காவிற்கு அரிசியைக் கொட்டுகின்றன என்று டிரம்ப் கேட்டதற்கு, டிரம்ப் அருகில் அமர்ந்திருந்த கென்னடி, ‘இந்தியா மற்றும் தாய்லாந்து; சீனா கூட அனுப்புகிறது.
புவேர்ட்டோ ரிக்கோ அமெரிக்க அரிசிக்கான மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றாக இருந்தது. பல ஆண்டுகளாக நாங்கள் புவேர்ட்டோ ரிக்கோவிற்கு அரிசியை அனுப்பவில்லை. இது பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இப்போது அதை மிகப் பெரிய அளவில் பார்க்கிறோம்’ என்றார். அப்போது டிரம்ப்,’ உங்களுக்கு இன்னும் என்ன வேண்டும் என்பது எனக்குப் புரிகிறது’ என்றார். பின்னர் கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்டை நோக்கி,’ இந்தியா, இந்தியா பற்றி சொல்லுங்கள். இந்தியா ஏன் அதைச் செய்ய அனுமதிக்கப்படுகிறது? அவர்கள் வரிகளை செலுத்த வேண்டும்.
அவர்களுக்கு அரிசிக்கு விலக்கு உள்ளதா?’ என்று கேட்டார். அதற்கு பெசென்ட்,’ இல்லை’ என்றார். பின்னர் டிரம்ப்,’ ஆனால் அவர்களின் குப்பையை இங்கு கொட்டக்கூடாது. இந்த பிரச்னை விரைவில் தீர்க்கப்படும். அமெரிக்காவுக்கு அரிசி சப்ளை செய்யும் நாடுகளின் பெயர்களை எங்களுக்குக் கொடுங்கள். மீண்டும் வரிகள். இது இரண்டு நிமிடங்களில் பிரச்சினையை தீர்க்கிறது’ என்றார். இதனால் இந்திய அரிசிக்கு கூடுதல் வரியை அமெரிக்கா விதிக்க வாய்ப்பு உள்ளது என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
2024-2025 நிதியாண்டில், இந்தியா ரூ.3510 கோடி மதிப்புள்ள பாஸ்மதி அரிசியை ஏற்றுமதி செய்தது. அதாவது அமெரிக்காவுக்கு மட்டும் மொத்தம் 2,74,213.14 மெட்ரிக் டன் ஏற்றுமதி செய்தது. இந்திய அரிசி ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பு தரவுகளின்படி, இந்திய பாஸ்மதி அரிசிக்கான 4வது பெரிய சந்தையாக தற்போது அமெரிக்கா உள்ளது. அதே காலகட்டத்தில், இந்தியா பாஸ்மதி அல்லாத அரிசி ரூ.500 மதிப்புக்கு ஏற்றுமதி செய்துள்ளது. அதாவது 61,341.54 மெட்ரிக் டன் அளவுக்கு ஏற்றுமதி செய்து, அமெரிக்காவை பாஸ்மதி அல்லாத அரிசிக்கான 24வது பெரிய சந்தையாக மாற்றியது.
* இந்திய பாஸ்மதி தரமே வேறு
அகில இந்திய அரிசி ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அஜய் பலோடியா கூறுகையில்,’ அமெரிக்காவிற்கு பாஸ்மதி அரிசி ஏற்றுமதி பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதியை விட ஐந்து மடங்கு அதிகம். இப்போது ஜனாதிபதி டிரம்ப் என்ன முடிவு செய்கிறார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்திய பாஸ்மதி தனித்துவமான நறுமணம், அளவு, அமைப்பு மற்றும் சுவை கொண்டுள்ளது
மேலும் அமெரிக்காவில் விளையும் அரிசி வகைகள் இந்திய தரத்தில் இல்லை. அமெரிக்காவில் இந்திய உணவு வகைகளான பிரியாணி போன்ற உணவுகள் அதிகரித்து வரும் நேரத்தில் அங்கு பாஸ்மதி அரிசி ஒரு அத்தியாவசிய மூலப்பொருள். எனவே அதை எளிதில் மாற்ற முடியாது’ என்று கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.


