Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விமான சேவை பாதிக்கும் வகையில் பழைய கழிவு பொருட்களை தீயிட்டு எரிக்காதீர்: விமானநிலைய ஆணையம் வலியுறுத்தல்

மீனம்பாக்கம்: சென்னை விமானநிலைய சுற்றுவட்டாரப் பகுதிகளான மீனம்பாக்கம், கவுல் பஜார், பொழிச்சலூர், பம்மல், அனகாபுத்தூர், தரப்பாக்கம், மணப்பாக்கம், நந்தம்பாக்கம் உள்பட பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் போகி பண்டிகை நாளின்போது, அதிகாலை நேரங்களில் பழைய டயர், பிளாஸ்டிக் உள்ளிட்ட பல்வேறு கழிவு பொருட்களை தீயிட்டு எரித்து வருகின்றனர். இதனால் விமானநிலைய ஓடுபாதையே தெரியாத அளவுக்கு அடர்த்தியான கரும் புகையுடன் கடும் பனிமூட்டமும் சூழ்ந்து கொள்கின்றன.

இந்நிலையில், இந்தாண்டு வரும் 14ம் தேதி போகி பண்டிகையை முன்னிட்டு, சென்னை விமானநிலைய சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு இந்திய விமானநிலைய ஆணையம் வேண்டுகோள் விடுத்து, அவற்றை விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கியும், உள்ளாட்சி அமைப்புகள் மூலம் பிரசாரத்தின் மூலமாக வலியுறுத்தி வருகிறது. அதன்படி, போகி பண்டிகையின்போது அதிகாலை நேரத்தில் விமானநிலைய சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பழைய டயர், பிளாஸ்டிக் உள்பட பல்வேறு கழிவு பொருட்களை தெரு மற்றும் சாலைகளில் போட்டு தீயிட்டு எரிப்பதை தவிர்க்க வேண்டும். இதன்மூலம் விமான சேவைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று இந்திய விமானநிலைய ஆணையம் வலியுறுத்தியுள்ளது.