Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

அதிமுக ஆட்சியில் 11 மருத்துவ கல்லூரி கட்டியதில் முறைகேடு சிபிஐ விசாரிக்க கோரிய வழக்கு விசாரணை ஐகோர்ட்டில் தள்ளிவைப்பு

சென்னை: முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில், திருவள்ளூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, நாமக்கல், ராமநாதபுரம், திண்டுக்கல், நாகப்பட்டினம், விருதுநகர், திருப்பூர், கிருஷ்ணகிரி, நீலகிரி ஆகிய 11 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டன. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பொதுப்பணித் துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில் கட்டப்பட்ட இந்த மருத்துவ கல்லூரிகள், தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு கட்டப்படவில்லை என்றும் மருத்துவக் கல்லூரிகள் கட்டியதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும், இதுசம்பந்தமாக சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி நன்னிலத்தை சேர்ந்த விவசாயி என்.ராஜசேகரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மனுதாரரான ராஜசேகரன் நேரில் ஆஜராகி, தமிழில் வாதங்களை முன்வைக்கத் துவங்கினார். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழி ஆங்கிலம் என்பதால், ஆங்கிலத்தில் வாதாட வேண்டும். அல்லது, வழக்கறிஞர் ஒருவரை நியமித்துக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார். மேலும் மனுதாரரிடம், என்ன தொழில் செய்கிறீர்கள்? எவ்வளவு நிலம் உள்ளது? என்ன சாகுபடி செய்கிறீர்கள் என்றும் தலைமை நீதிபதி கேட்டார்.அதற்கு பதிலளித்த மனுதாரர், 10 ஏக்கர் நிலத்தில் நெல் சாகுபடி செய்வதாகக் கூறினார். இதையடுத்து, விவசாயத்தை கவனித்து, நிலத்தை பாதுகாத்துக்கொள்ளுங்கள் என்று மனுதாரருக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்கறிஞரை நியமித்துக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.