தாம்பரம் மாநகராட்சியை கண்டித்து அதிமுக 16ல் ஆர்ப்பாட்டம்
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தாம்பரம் மாநகராட்சி நிர்வாகம் சொத்து வரியை உயர்த்துவதில் எவ்வித முறையையும் பின்பற்றாமல், வீடுகளுக்கு 100 சதவீதமும், வணிக நிறுவனங்களுக்கு 150 சதவீதமும் உயர்த்தியுள்ளது. தாம்பரம் சானடோரியத்தில் சுமார் ரூ.110 கோடி மதிப்பீட்டில், அவசர அவசரமாக கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ள மருத்துவமனையில், போதிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களும், சிகிச்சை அளிப்பதற்கு தேவையான உபரகணங்களும் இல்லை. மாடம்பாக்கம் ஏரி எவ்வித பராமரிப்பும் இன்றி, கழிவுநீர் கலக்கப்பட்டு மாசடைந்துவிட்டதால், குடிநீருக்கு மக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர்.
இதுபோன்று மக்களின் அடிப்படை தேவைகளை உடனுக்குடன் செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டு வைத்திருக்கும் தமிழக அரசு மற்றும் தாம்பரம் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அதிமுக செங்கல்பட்டு மேற்கு மாவட்டத்தின் சார்பில் வருகிற 16ம் தேதி (செவ்வாய்) மாலை 4 மணியளவில், மேற்கு தாம்பரம், சண்முகம் சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்த கண்டன ஆர்ப்பாட்டம், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தலைமையில், செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராசேந்திரன்முன்னிலையிலும் நடைபெறும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.