Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திண்டிவனத்தில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம்; சிவி சண்முகம், பசுபதி ஆதரவாளர்கள் மோதல்: போலீஸ் குவிப்பு: பதற்றம்

திண்டிவனம்: விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளராக 2 மாதங்களுக்கு முன்பு பசுபதி நியமிக்கப்பட்டார். முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், அவர் தனது ஆதரவாளர்களுடன் தவெகவில் விரைவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி வருகின்றன. இருப்பினும் அம்மாவட்டத்தில் நீண்டநாட்களாக செயலாளர் பதவியில் கோலோச்சிய சிவி சண்முகம், அதிமுகவில் தனது ஆதரவாளர்கள் நீடிப்பதை தடுக்கும் நடவடிக்கையில் மேற்கொண்டுள்ளார். இதற்காக தன்னால் கடந்த காலங்களில் பயனடைந்த நெருக்கமானவர்கள் மூலமாக காய்களை நகர்த்தி பசுபதிக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறார். சமீபத்தில் மயிலத்தில் நடந்த அதிமுக நிர்வாகிகள் கூட்டத்திற்கும் சிவி சண்முகம் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அக்கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் திண்டிவனத்தில் இன்று அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்துக்கு எடப்பாடி ஆதரவாளரான பசுபதி ஏற்பாடு செய்திருந்தார். மாவட்ட துணை செயலாளர் ஷெரிப், நகர அவைத்தலைவர் மணிமாறன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அனைவரும் கலந்து ெகாண்டனர். இதில் பங்கேற்க கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டன. ஆனால் ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட சில முக்கிய நிர்வாகிகளை அதில் பங்கேற்க செய்யாமல் தடுக்கும் நடவடிக்கையில் சிவி சண்முகம் தரப்பு மறைமுகமாக இறங்கிய நிலையில், பெரும்பாலானோர் அதை நிராகரித்து விட்டதாக தெரிகிறது. சிவி சண்முகத்தின் சொந்த ஊரிலேயே பசுபதி தரப்பு கூட்டத்தை நடத்தியதால், அசம்பாவிதம் தடுக்க காவல் நிலையம் எதிரே உள்ள மண்டபம் முன்பு போலீசார் பாதுகாப்பு பணிக்கு குவிக்கப்பட்டனர்.

காலை 10 மணியளவில் பசுபதி ஆதரவாளர்கள் கூட்டத்தில் பங்கேற்க குழு குழுவாக திரண்டு மண்டபம் அருகே வந்தனர். அதேபோல் சிவி சண்முகம் ஆதரவாளர்களும் மண்டபம் அருகே தனிகோஷ்டியாக திரண்டனர். அப்போது அங்குவந்த போலீசார் சிவி சண்முகம் தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது திண்டிவனம் தொகுதியில் அதிமுக தோல்வியடைந்துள்ள நிலையில் நகர செயலாளர், பொருளாளர், அவைத்தலைவரான தங்களை அழைக்காமல் எப்படி பசுபதி தனியாக ஒரு கோஷ்டியை வைத்துக் கொண்டு கூட்டத்தை நடத்தலாம் என போர்க்கொடி தூக்கினர். இதை ஏற்க முடியாது என போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதேபோல் பசுபதி தரப்பினரோ, ஒவ்வொரு கூட்டத்திற்கும் இதேபோல் சிவி சண்முகம் தரப்பினர் வந்து, பிரச்னை செய்வதாக கூறி பதிலடி கொடுத்தனர். இதனால் இருதரப்புக்கும் மோதல் ஏற்படும் சூழல் நிலவிய நிலையில், சிவி சண்முகம் ஆதரவாளர்களை மண்டபத்துக்குள் அனுமதிக்க போலீசார் மறுத்தனர். இதனால் இருதரப்புக்கும் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டு பதற்றமான சூழல் நிலவியது. அதைத் தொடர்ந்து மண்டபத்துக்குள் அவர்களையும் போலீசார் அனுமதித்தனர். அங்கு இருதரப்பும் பங்கேற்றுள்ளதால் தொடர்ந்து பரபரப்பு நிலவுகிறது.