தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் ஈரத்தை அறிந்து செயல்படும் நானோ களைக்கொல்லி தயாரிப்பு முறைக்காக காப்புரிமை பெற்றுள்ளது. இந்த கண்டுபிடிப்புக்கான காப்புரிமை முனைவர் ஜக்கு பிரசன்னா, மாரிமுத்து, கோள்ளா கவுதம் மற்றும் கதிரவன் சண்முகநாதன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. அட்ரசின் என்னும் களைக்கொல்லி சோளம், மக்காச்சோளம் மற்றும் கரும்பு போன்ற பயிர்களில் களைகளைக் கட்டுப்படுத்த பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இருந்தபோதிலும் இந்தக் களைக்கொல்லி மண்ணில் நீண்ட காலம் நிலைத்து நிற்கும் தன்மை கொண்டது. எனவே இந்த நச்சுப்பொருள் குறிப்பாக பாசன வசதி கொண்ட வயல்களில் இருந்து வெளியேறி நிலத்தடி நீர் மாசுபாட்டை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. மானாவாரி நிலங்களில் இந்தக் களைக்கொல்லியைப் பயன்படுத்தும்போது அவற்றின் செயல்திறன் மழைப்பொழிவையே சார்ந்துள்ளது. மழை குறைந்தால் இந்த களைக்கொல்லி ஆவியாகி வெளியேறிவிடும். அதேசமயம் மழை அதிகம் பெய்தால் அது மண்ணுக்கு அடியில் சென்று செயலிழக்கும்.
மேற்கண்ட பிரச்னைகளுக்கு தீர்வுகான வேளாண் நானோ தொழில்நுட்ப மையத்தில் முனைவர் பட்ட மாணவர் மேற்கொண்ட ஆய்வின் முடிவில் இந்த நானோ களைக்கொல்லி உருவாக்கப்பட்டுள்ளது. பாசன வயல்களில் இந்த நானோ களைக்கொல்லி மெதுவாக வெளியேறி களை களைக் கட்டுப்படுத்துவதால், வயல்களிலிருந்து வெளியேறுவது தவிர்க்கப்பட்டு நிலத்தடி மாசுபாடு தடுக்கப்படுகிறது. மானாவாரி நிலங்களில் இந்த நானோ களைக்கொல்லிகளைப் பயன்படுத்தும்போது மழை பெய்யும் வரை ஆவியாகாமலும் ஒளி மற்றும் நுண்ணுயிர் சிதைவிலிருந்து பாதுகாக்கப்படுகின்றன. எனவே இது நீண்ட நாட்களுக்கு வயலில் தங்கி களைகளை சிறப்பாக கட்டுப்படுத்துகிறது.



