Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

புதிய திரைப்படத்தின் பெயரால் சர்ச்சை படக்குழு மீது வழக்கு விளம்பர காட்சிக்கு தடை: பாஜக அரசு மீது அகிலேஷ் யாதவ் காட்டம்

லக்னோ:புதிய திரைப்படம் ஒன்றின் பெயரால் எழுந்துள்ள சர்ச்சை குறித்து பாஜகவை சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கடுமையாக சாடியுள்ளார். ‘ஓடிடி’ தளத்தில் வெளியாக இருந்த ‘லஞ்சப் பண்டிதர்’ என்ற பெயரிலான திரைப்படம் ஒன்று குறிப்பிட்ட சமூகத்தை இழிவுபடுத்துவதாகக் கூறி வடமாநிலங்களில் போராட்டங்கள் வெடித்தன. இது ஒரு கற்பனையான போலீஸ் கதை என்றும், கதாபாத்திரத்தின் அடையாளத்திற்காகவே அந்தப் பெயர் பயன்படுத்தப்பட்டதாக இயக்குனர் நீரஜ் பாண்டே மற்றும் நடிகர் மனோஜ் பாஜ்பாய் விளக்கம் அளித்த போதிலும் பல இடங்களில் போராட்டங்கள் நீடித்தன.

இந்த விவகாரத்தில் உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவின் பேரில் லக்னோ போலீசார் படக்குழுவினர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும், துணை முதல்வர் பிரஜேஷ் பதக் விடுத்த கோரிக்கையை ஏற்று, அந்தத் திரைப்படத்தின் விளம்பரக் காட்சிகளை இணையதளத்திலிருந்து உடனடியாக நீக்க ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த சர்ச்சை குறித்து சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வெளியிட்ட அறிக்கையில், ‘குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவுபடுத்தி அவர்களை தனிமைப்படுத்துவதற்காக சில நபர்களை அதே சமூகத்திற்கு எதிராக பாஜக பயன்படுத்துகிறது.

முதலில் குறிப்பிட்ட சமூகத்தை அவமதிக்கும் வகையில் திரைப்படங்களை எடுக்கத் தூண்டிவிட்டு, பின்னர் அந்தப் பிரச்னை பெரிதானவுடன் தாங்களே அதைக் காப்பாற்றுவது போல பாஜக நாடகமாடுகிறது. இத்தகைய பாரபட்சமான படைப்புகளை முழுமையாகத் தடை செய்ய வேண்டும். அரசியல் லாபத்திற்காக சினிமாவை பயன்படுத்துபவர்களுக்கு கடும் பொருளாதார இழப்பை ஏற்படுத்த வேண்டும்’ என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.