Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

முன்விரோதத்தில் வாலிபர் மீது தாக்குதல் 3 பேருக்கு தலா 5 ஆண்டு சிறை

சென்னை: முன் பகை காரணமாக வாலிபரை தாக்கிய வழக்கில் 3 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆர்.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் அன்பு (24). ராயப்பேட்டையில் உள்ள ஒரு இரும்பு கடையில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் ஆர்.கே.நகர் பகுதியை சேர்ந்த சிலருக்கும் முன் பகை இருந்து வந்துள்ளது. இந்நிலையில், கடந்த 2020 டிசம்பர் 14ம் தேதி இரவு 8.30 மணிக்கு அன்பு தனது நண்பர் மணிகண்டனுடன் மணலி சாலை அருகே சாப்பாடு வாங்க சென்றனர். அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த ஹரி, சரவணன், விக்னேஷ் ஆகியோர் அன்புவை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் அவர்கள் வைத்திருந்த இரும்பு பிளேட்டால் கடுமையாக தாக்கியுள்ளனர். படுகாயமடைந்த அன்பு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஆர்.கே.நகர் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அன்புவுக்கும் கொருக்குபேட்டையை சேர்ந்த ஹரி, சரவணன், விக்னேஷ் ஆகியோருக்கும் முன்பகை இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, ஹரி, சரவணன், விக்னேஷ் ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்கள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு சென்னை 5வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.முருகானந்தம் முன்பு விசாரணைக்கு வந்தது. போலீஸ் தரப்பில் மாநகர கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் எஸ்.பகவதிராஜ் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் போதுமான ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்களுடன் நிரூபிக்கப்பட்டதால் ஹரி, சரவணன், விக்னேஷ் ஆகியோருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் தலா ரூ.7500 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.