அரசு மருத்துவக் கல்லூரியில் சான்றிதழ் பயிற்சி மாணவர் சேர்க்கை
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியில் வழங்கப்படவுள்ள ஓராண்டு சான்றிதழ் பயிற்சிகள் குறித்து சென்னை ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியில் 2025-26ஆம் கல்வியாண்டில் ஓராண்டு பாடப்பிரிவுகளான அனஸ்தீஷியா டெக்னீஷியன், அறுவை சிகிச்சைப் பிரிவு டெக்னீஷியன், ஆர்தோபெடிக் டெக்னீஷியன் போன்ற சான்றிதழ் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.
இந்த பாடப்பிரிவுகளுக்கு மாவட்ட அளவிலான சேர்க்கை வாயிலாகவும், முன் விண்ணப்பமில்லா நேரடி சேர்க்கை முறையிலும் நடைபெறும் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருகின்றன. இது தொடர்பான கூடுதல் விவரங்கள் < https://gmcomu.ac.in > என்ற இணையதளத்திலும், ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியின் அறிவிப்புப் பலகையிலும் இடம்பெற்றுள்ளன. அதன்படி 17 வயது நிறைவுசெய்து, தேர்வுக் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட, 10ஆம் வகுப்பு அல்லது மேல்நிலைப் பள்ளிப் படிப்பில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அலுவலகத்தில் விண்ணப்பங்களை நேரடியாகப் பெற்று வரும் நவம்பர் 14ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். கலந்தாய்வின்போது ஒதுக்கீடு ஆணைகள் அந்த இடத்திலேயே வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.