திருவனந்தபுரம்: மலையாள நடிகை பலாத்கார வழக்கில் பிரபல நடிகர் திலீப் 8வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். இந்த வழக்கில் இவர் சதித்திட்டம் தீட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. கடந்த 7 வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வந்த விசாரணையில் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் இந்த வழக்கில் முதல் 6 பேர் குற்றவாளிகள் என்று எர்ணாகுளம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நடிகர் திலீப் மீது பதிவு செய்யப்பட்டிருந்த சதித்திட்டம் தொடர்பான குற்றங்களை அரசுத் தரப்பால் நிரூபிக்க முடியவில்லை என்று கூறி நீதிமன்றம் அவரை விடுவித்தது.
தீர்ப்புக்குப் பின் திலீப் நிருபர்களிடம் கூறுகையில், இந்த வழக்கில் நான் சதித்திட்டத்தில் ஈடுபடவில்லை. ஆனால் சில கிரிமினல் போலீஸ் அதிகாரிகள் சேர்ந்துதான் எனக்கு எதிராக சதித்திட்டம் தீட்டினர் என்றார். இந்நிலையில் போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக நடிகர் திலீப் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 12ம் தேதி தீர்ப்பு வெளியான பின்னர் அதில் தெரிவிக்கப்பட்டிருக்கும் விவரங்களின் அடிப்படையில் அவர் நீதிமன்றத்தை அணுக தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.
திலீப் தன்னைத்தானே நியாயப்படுத்தி கொள்கிறார்: கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்ணூரில் நிருபர்களிடம் கூறியது: நடிகை பலாத்கார வழக்கில் விசாரணை அதிகாரிகள் தங்களுக்கு கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் தான் வழக்கை நடத்தினர். தீர்ப்பு குறித்த விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. அவை வந்த பின்னர் மட்டுமே எதையும் கூற முடியும். தனக்கு எதிராக விசாரணை அதிகாரிகள் சதி செய்ததாக திலீப் கூறுகிறார். அதில் எந்த உண்மையும் கிடையாது. தன்னை நியாயப்படுத்துவதற்காகத் தான் அவர் இவ்வாறு கூறுகிறார். அரசுத் தரப்பு சார்பில் இந்த வழக்கில் சிறப்பாக வாதிடப்பட்டது என்றார்.


