நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் நாளை மறுநாள் வெளியாகவுள்ள கூலி திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் முன்னணி நடிகர்கள் அமீர் கான், சத்யராஜ், நாகார்ஜூனா, சவுபின் ஷாஹிர், பகத் பாசில், உபேந்திரா, நடிகைகள் ஸ்ருதிஹாசன், ரெபா மோனிகா ஜான் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம் வரும் 14ம் தேதி உலகெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இந்த படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதிக்கக் கோரி பட தயாரிப்பு நிறுவனமான சன் டிவி நெட்வொர்க் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த படம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட்டால் தயாரிப்பாளர் உள்ளிட்டோருக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். எனவே, கூலி திரைப்படத்தை இணையதளங்களில் வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என்று கோரினார். இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, படத்தை இணையதளங்களில் வெளியிட அனுமதிக்க கூடாது என்று தடை விதித்து பி.எஸ்.என்.எல், ஏர்டெல் உள்ளிட்ட 36 இணையதள சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிட்டார். அதேபோல, ஆறு கேபிள் டிவி நெட்வொர்க் நிறுவனங்களுக்கும் தடை விதித்து நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.