நடிகர் வடிவேலுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவிக்க மாட்டேன் என உத்தரவாதம் தர வேண்டும்: மனுவாக தாக்கல் செய்ய நடிகர் சிங்கமுத்துவுக்கு ஐகோர்ட் உத்தரவு
சென்னை: நடிகர் வடிவேலுவுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் எந்த கருத்தும் தெரிவிக்க மாட்டேன் என்று உத்தரவாதம் அளித்து மனுதாக்கல் செய்யுமாறு நடிகர் சிங்கமுத்துவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யூடியூப் சேனல்களுக்கு அளித்த பேட்டியில், தன்னை பற்றி அவதூறாக பேசியதற்காக 5 கோடி ரூபாயை மானநஷ்டஈடாக வழங்குமாறு நடிகர் சிங்கமுத்துக்கு உத்தரவிடவும், தன்னை பற்றி அவதூறாக பேச அவருக்கு தடை விதிக்கவும் கோரி நடிகர் வடிவேலு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக சிங்கமுத்து தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில்மனுவில், அவதூறாக தெரிவித்த வார்த்தை எது என்பதை வடிவேலு மனுவில் குறிப்பிடவில்லை. திரைத்துறையை சேர்ந்தவர்களின் கருத்துகளை மட்டுமே பேட்டியில் தெரிவித்ததாக கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, வடிவேலு தரப்பில் இந்த வழக்கை தாக்கல் செய்த பிறகும், சிங்கமுத்து தொடர்ந்து அவதூறு பேட்டிகளை அளித்து வருவதாக கூறப்பட்டிருந்தது.
ஆனால், வழக்கு தொடர்ந்த பின்னர் எந்த பேட்டியும் கொடுக்கவில்லை. வழக்கில் மூத்த வழக்கறிஞர் ஆஜராக கடைசி வாய்ப்பாக வழக்கை தள்ளிவைக்க வேண்டும் என்று கோரப்பட்டது. இதை ஏற்று, வழக்கை வரும் 11ம் தேதி தள்ளி வைத்த நீதிபதி, வடிவேலுவுக்கு எதிராக தெரிவித்த கருத்துகளை திரும்பப் பெற்றுக் கொள்வதாகவும், இனிமேல் அவருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் எந்த கருத்தையும் தெரிவிக்க மாட்டேன் எனவும் உத்தரவாதம் அளித்தும் மனுதாக்கல் செய்யுமாறு சிங்கமுத்து தரப்புக்கு உத்தரவிட்டார். மேலும், பேட்டி வீடியோக்களை நீக்கும்படி சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல்களுக்கு கடிதம் அனுப்பும்படியும் சிங்கமுத்து தரப்புக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


