தேனி: தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையராக இருப்பவர் ஏகராஜ். இவர் வருவாய்க்கு அதிகமாக சுமார் ரூ.2.50 கோடி வரை சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத்தொடர்ந்து ஏகராஜ் மீது சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், சென்னை திருவள்ளூரில் உள்ள ஏகராஜின் சொந்த வீட்டில், லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். அதேபோன்று, பொம்மையக்கவுண்டன் பட்டியில் உள்ள அவரது வீட்டிலும் நேற்று காலை 8 மணியளவில் தேனி லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனைக்கு சென்றனர். மருத்துவ விடுப்பில் ஏகராஜ் சென்னைக்கு சென்றதால் அங்கே வீடு பூட்டப்பட்டிருந்தது. இதனையடுத்து, போலீசார் நகராட்சி ஊழியர்களை சாட்சியாக வைத்து வீட்டின் பூட்டை உடைத்து, உள்ளே சென்று சோதனையில் ஈடுபட்டனர். இச்சோதனை நேற்று காலை தொடங்கி மாலை வரை நீடித்தது.
Advertisement

