Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

திருப்போரூர் பேரூராட்சியில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து: வாகன ஓட்டிகள் கடும் அவதி, நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

திருப்போரூர்: திருப்போரூர் பேரூராட்சியில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்துகளில் சிக்கி வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருப்போரூர் பேரூராட்சியில் திருப்போரூர், கண்ணகப்பட்டு, காலவாக்கம் ஆகிய 3 கிராமங்கள் உள்ளன. இதில், 75க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இங்கு, 30 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர்.

அடுக்குமாடி குடியிருப்புகள், புதிய வீட்டு மனைப்பிரிவுகள் என திருப்போரூர் வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்நிலையில், திருப்போரூரில் உள்ள மடம் தெரு, பிள்ளையார் கோயில் தெரு, கச்சேரி சந்து தெரு, சான்றோர் வீதி, கண்ணகப்பட்டு கங்கையம்மன் கோயில் தெரு, மேட்டுத்தெரு ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் மாடுகளை வளர்த்து வருகின்றனர். இதன் மூலம் பால், தயிர் மற்றும் வறட்டி விற்பனை போன்றவற்றில் ஈடுபட்டு வருவாய் ஈட்டுகின்றனர்.

ஆனால், பெரும்பாலான மாடுகளின் உரிமையாளர்கள் காலை மற்றும் மாலை வேளைகளில் பால் கறக்கும்போது மட்டும் மாடுகளை பிடித்து பால் கறந்து விட்டு மற்ற நேரங்களில் அவற்றை சாலைகளில் சுற்றித்திரியும்படி விட்டு விடுகின்றனர். போதுமான மேய்ச்சல் நிலங்கள் இல்லாததால் அவை சாலையோரம் உள்ள குப்பைமேடுகளில் உணவு தேடி அலைகின்றன. இவ்வாறு குப்பை மேடுகளை தேடி அலையும் மாடுகள் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டு சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மீது மோதி விபத்தை ஏற்படுத்துகின்றன.

சாலையோரம் பள்ளிக்கு நடந்து செல்லும் மாணவ, மாணவியர் மாடுகளின் கூட்டத்தைப் பார்த்ததும் ஒரு வித அச்சத்துடனே செல்கின்றனர். சைக்கிளில் செல்வோரையும் மாடுகள் முட்டித் தள்ளுகின்றன. இது போன்ற சம்பவங்களால் அடிக்கடி வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். இதனால், சாலைகளில் திரியும் மாடுகளை பிடிக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கடந்த ஆண்டு மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்பேரில், பேரூராட்சி நிர்வாகம் சாலையில் சுற்றி திரியும் மாடுகளை பிடித்து அபராதம் விதித்தது. ஆனால், அதனை மாட்டின் உரிமையாளர்கள் பொருட்படுத்தவில்லை. இதனால், தற்போது மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து மீண்டும் சாலைகளில் சுற்றி திரிகின்றன. ஆகவே, பேரூராட்சி நிர்வாகம் திருப்போரூர் ஓஎம்ஆர் சாலையில் திரியும் மாடுகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டுமென்று கோரிக்கை எழுந்துள்ளது.