புதுடெல்லி: ஒன்றிய உள்துறை அமைச்சகம் வௌியிட்டுள்ள அறிக்கையில்,‘‘சமீபத்திய ஆண்டுகளில் இன்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ் எனப்படும் தேடப்படும் நபர் குறித்த அறிவிப்புகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் 401 தலைமறைவு குற்றவாளிகளுக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிடப்பட்டது. தலைமறைவு குற்றவாளிகளுக்கு எதிராக இந்தியா ஒரு ஒருங்கிணைந்த, உளவுத்துறை சார்ந்த மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த கட்டமைப்பை உருவாக்கியுள்ளது.
கடந்த 7 ஆண்டுகளில் 36 நாடுகளில் இருந்து மொத்தம் 274தலைமறைவுக் குற்றவாளிகள் இந்தியாவுக்கு திரும்பக் கொண்டுவரப்பட்டுள்ளனர். இது ஆண்டுக்கு சராசரியாக சுமார் 40 பேர் என்ற எண்ணிக்கையை குறிக்கிறது. இதே காலகட்டத்தில் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தலைமறைவு குற்றவாளிகளுக்கு சொந்தமான ரூ.17,814கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.
முந்தைய அரசுகளிடம் தலைமறைவு குற்றவாளிகளை திரும்பக் கொண்டு வருவதற்கான அரசியல் உறுதிப்பாடு இல்லை. ஆனால் பிரதமர் மோடி அரசு தலைமறைவு குற்றவாளிகளை நாடு கடத்தி அழைத்து வருவதை ஒரு தேசிய முன்னுரிமையாக மாற்றியுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
