Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அரசியல் கணக்கையே மாற்றிய அதிரடி பார்முலா: தமிழ்நாட்டிற்கு 234 தொகுதிகள் எப்படி வந்தது?

சென்னை: தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வந்தாலே நம் நினைவுக்கு வரும் எண் 234. இந்தியாவில் முதல் பொதுத்தேர்தல் 1952ம் ஆண்டு நடந்த போது ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகாவின் சில பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தது மெட்ராஸ் மாகாணம். அப்போது மெட்ராஸ் மாகாணத்தில் மட்டும் 309 தொகுதிகள் இருந்தன. பின்னர் 1953ம் ஆண்டு ஆந்திரா தனி மாநிலமாக பிரிந்த பிறகு சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 231ஆக குறைக்கப்பட்டது. 1956ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது கேரளா மற்றும் கர்நாடகா பகுதிகள் பிரிந்து சென்றதால் தமிழ்நாட்டின் சட்டமன்ற தொகுதிகள் எண்ணிக்கை 206ஆக குறைந்தன.

இந்த நிலையில் 1961ல் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பிறகு தொகுதி மறுவரையரை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளின் எல்லைகளை மீண்டும் வரையறுக்க வேண்டி இருந்தது. இந்த ஆணையத்துக்கு 2 பணிகள். ஒன்று ஒவ்வொரு மாநிலத்துக்கும் மக்களவை இடங்களின் எண்ணிக்கையை நிர்ணயிப்பது. மற்றொன்று சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை நிர்ணயிப்பது. 1961 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி தமிழகத்தில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் வட மாநிலங்களை விட குறைவாக இருந்தது. இதனால் தமிழ்நாட்டில் மக்களவை தொகுதிகள் 41ல் இருந்து 39ஆக குறைக்கப்பட்டது.

அப்போதைய வழக்கத்தின் படி ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு 5 சட்டமன்ற தொகுதிகள் என்ற கணக்கை பின்பற்ற வேண்டும். இதன்படி பார்த்தால் தமிழ்நாட்டில் சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 206ல் இருந்து 195ஆக குறைந்துவிடும். இது மக்களாட்சியின் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் செயலாக கருதப்பட்டது. மேலும் தமிழ்நாட்டில் குரலை வலுவிழக்க செய்யும் என அப்போதைய தமிழக அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்களிடையே கடும் அதிருப்தி நிலவியது. 195ஆக தொகுதிகள் குறைந்தால் நிலப்பரப்பு ரீதியாக ஒவ்வொரு தொகுதியும் மிகப்பெரியதாக மாறும் என்றும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் கவனிக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து நிர்வாக சிக்கல் ஏற்படும் என்றும் சுட்டிக் காட்டப்பட்டது.

இந்த எதிர்ப்புகளையும் மாநில சட்டமன்றத்தின் வலிமை குறைவதையும் கவனித்த தொகுதி மறுவரையரை ஆணையம் தானாகவே முன்வந்து ஒரு தீர்வை யோசித்தது. இந்த ஆணையம் மற்ற மாநிலங்களுக்கு வழங்காத ஒரு சிறப்பு சலுகையை தமிழ்நாட்டிற்கு அளித்தது. அதாவது ஒரு மக்களைவை தொகுதிக்கு 5 சட்டமன்ற தொகுதிகள் என்ற விதியை மாற்றி தமிழகத்திற்கு மட்டும் 6 சட்டமன்ற தொகுதிகள் என நிர்ணயம் செய்தது. இந்த முடிவின் மூலம் 195ஆக குறைய இருந்த இடங்கள் 234ஆக உயர்ந்து தமிழ்நாட்டின் அரசியல் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட்டது.

ஆணையம் பெருக்கல் எண்ணிக்கையை மாற்றியிருக்கவிட்டால் இன்று தமிழ்நாட்டில் 195 சட்டமன்ற தொகுதிகள் தான் இருந்திருக்கும். ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை 100க்கும் குறைவாக இருந்திருக்கும் என்பதால் கூட்டணி பேச்சுவார்த்தைகளே முற்றிலும் மாறியிருக்கும். மொத்தத்தில் மறுவாரையை ஆணையம் எடுத்த எண்களின் அடிப்படையில் எடுத்த முடிவு தமிழ்நாட்டின் அரசியலையே மாற்றிவிட்டது என்று சொல்லலாம்.