Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விஜய் சொன்னது ஒன்று... செய்தது ஒன்று...பயிர் கடன் தள்ளுபடி அறிவிப்பு பித்தலாட்டம்: தமிழகம் முழுவதும் போராட்டம் வெடிக்கும்: விவசாய சங்க தலைவர்கள் எச்சரிக்கை

திருச்சி: முதல்வர் விஜய்யின் பயிர் கடன் தள்ளுபடி அறிவிப்பு பித்தலாட்ட செயலாகும். சொன்னது ஒன்று, செய்வது ஒன்றாக உள்ளது. தமிழகம் முழுவதும் விவசாயிகளை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என விவசாய சங்க தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தவெக தேர்தல் அறிக்கையில் 5 ஏக்கர் வரை உள்ள விவசாயிகளுக்கு கூட்டுறவு பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். 5 ஏக்கருக்கு மேல் உள்ளவர்களுக்கு 50 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தது.

அதன்படி முதல்வர் விஜய், பயிர் கடன் தள்ளுபடி செய்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ரூ.50,000 வரை மட்டுமே பயிர்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. குறு விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் வரை ரூ.40,000ல் இருந்து ரூ.5,000 வரையிலும், ரூ.1 லட்சத்துக்கு மேல் ரூ.5,000 மட்டும், சிறு விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் வரை ரூ.20,000ல் இருந்து ரூ.5,000 வரை, ரூ.1 லட்சத்துக்கு மேல் ரூ.5,000 மட்டும் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது விவசாயிகளை கடும் ஏமாற்றத்தில் ஆழ்த்தி உள்ளது. விஜய்யின் இந்த அறிவிப்புக்கு டெல்டா மாவட்ட விவசாய சங்க தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன்: சிறு, குறு விவசாயிகளுக்கு 100சதவீதம், பெரு விவசாயிகளுக்கு 50 சதவீதம் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று விஜய் அறிவித்தார். இதன் மீது நம்பிக்கை வைத்து விவசாயிகள் வாக்களித்தனர். அதன்படி கடன் தள்ளுபடி அறிவிப்பை வெளியிட்டிருக்க வேண்டும். அதை விடுத்து ரிசர்வ் வங்கி வழிகாட்டுதலை பின்பற்றி, நிதி சுமையை காரணம் காட்டி விவசாயிகளுக்கு பயனளிக்காத கடன் தள்ளுபடி அறிவிப்பு வெளியிட்டது ஏமாற்றம் அளிக்கிறது.

மாநில அரசுகள் தனது நிதியிலிருந்து செயல்படுத்தும் கடன் தள்ளுபடி உள்ளிட்ட நலத்திட்டங்களுக்கு ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்கள் பொருந்தாது என்பதை விஜய் உணர வேண்டும். கடந்த காலங்களை பின்பற்றி கடன் வசூல் நடவடிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும். நடப்பாண்டுக்கான புதிய கடன் வழங்குவதற்கான நடவடிக்கையை அரசு தீவிரப்படுத்த வேண்டும். நிதி ஆதாரங்களை பெருக்கிக்கொண்டு கடன் தள்ளுபடி நடவடிக்கையை தொடர வேண்டும். அதுவரை தற்போதைய அறிவிப்பை நிறுத்தி வைத்து மறுபரிசீலனை செய்ய விஜய் முன் வரவேண்டும்.

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாய சங்க மாநில தலைவர் பூ.விஸ்வநாதன்: விஜய் சொன்னது ஒன்று, செய்வது ஒன்றாக உள்ளது. சிறு விவசாயிகளுக்கு 100 சதவீதம், பெரு விவசாயிகளுக்கு 50 சதவீதம் தள்ளுபடி என அறிவித்து விட்டு தற்போது பட்டியல் போட்டுள்ளது பித்தலாட்ட செயலாகும். இது விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிக்கிறது. ஒன்றிய அரசு நிதி அளிக்காது என்பது உண்மை தான். அது விஜய்க்கு தெரியாதா?. ஆட்சிக்கு வருவதற்காக கவர்ச்சி தள்ளுபடியை அறிவித்தாரா?. திமுக, அதிமுக அரசுகள் சொன்னபடி விவசாயிகளுக்கு தள்ளுபடி செய்துள்ளனர். எனவே விஜய் சொன்னபடி பயிர்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் தமிழகம் முழுவதும் விவசாயிகளை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம்.

இந்திய விவசாயிகள் சங்க மாநில பொது செயலாளர் புதுகை தனபதி: விஜய்யின் பயிர் கடன் அறிவிப்பு, ஆட்சிக்கு வருவதற்கு முன் ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்த பின் ஒரு பேச்சாக உள்ளது. இது விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றத்தை தருகிறது. கூட்டுறவு சங்கங்களில் ரூ. 2 லட்சத்துக்கு மேல் கடன் தருவதில்லை. நெல்லுக்கு ஏக்கருக்கு ரூ. 40ஆயிரம் வரை, கரும்புக்கு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வரை கடன் பெற முடியும். சாதாரணமாக 3 ஏக்கர் நிலம் வைத்துள்ள சிறு விவசாயி ரூ.1.80 லட்சம் வரை கடன் பெற்றிருக்கிறார்கள். எனவே, விஜய் பயிர்கடன் தள்ளுபடி அறிவிப்பை மாற்றி வெளியிட வேண்டும். அனைத்து விவசாயிகளின் பயிர்கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.

காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் கே.வீ.இளங்கீரன்: தமிழக முதல்வர் விவசாயிகள் தொடக்க வேளாண்மை வங்கியில் பெற்ற பயிர் கடன் தள்ளுபடி என்ற பெயரில், விவசாயிகளை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியுள்ளார். சிறு குறு விவசாயிகள் இரண்டரை ஏக்கருக்கு கடன் பெற்றிருந்தாலே ரூ.91,250 வருகிறது. இதை முழுவதுமாக தள்ளுபடி செய்தால் மட்டுமே தான் விவசாயிகளுக்கு ஓரளவு கடனிலிருந்து மீள முடியும்.

ஆனால், முதல்வர் அறிவித்துள்ள இந்தத் தள்ளுபடி அறிவிப்பு விவசாயிகளை ஏமாற்றுவதற்குச் சமம். விவசாயிகளை இதைவிட யாராலும் அவமானப்படுத்த முடியாது. விவசாயிகளுக்கு பிச்சை வேண்டாம் முதல்வரே; கடனை தள்ளுபடி செய்யுங்கள். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் மாசிலாமணி: ஒரு ஏக்கர் கரும்பு சாகுபடிக்கு ரூ.60,000, ஒரு ஏக்கர் நெல் சாகுபடிக்கு ரூ.36 ஆயிரம் வங்கிகள் கடனாக கொடுப்பதாக பதிவு செய்யப்படுகிறது. ஆனால், இவர்களுக்கு இப்போது தள்ளுபடிகள் அறிவித்து இருப்பது ரூ.5000 மட்டுமே. இதுவரை நிலம் சீலிங் அளவாகக் கொண்டு பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. புதிய முதல்வர் புதிய நிலையில் கடன் தொகையை அளவாகக் கொண்டு விவசாயிகளை ஏமாற்றியுள்ளார்.

கடந்த காலங்களில் ஒன்றிய அரசு ரூ.71,000 கோடி, தமிழக அரசு இரு தடவை ரூ.12000 கோடி மற்றும் ரூ.7000 கோடி என்று தள்ளுபடி செய்துள்ளது. அப்போது எல்லாம் இந்த சீலிங் கிடையாது. அதுவும் இப்போதைய தள்ளுபடி தொகை ரூ.2000 கோடி மட்டுமே. தமிழ்நாடு அரசின் நிதி இருப்பு தெரிந்துதானே அப்பொழுது வாக்குறுதி அளித்திருக்க வேண்டும். எனவே முதல்வர் தேர்தல் கால வாக்குறுதிப்படியே சிறுகுறு விவசாயிகளுக்கு முழு கடன் தள்ளுபடியும்.

இதர விவசாயிகளுக்கு 50 சதவீதம் தள்ளுபடியும் மறு ஆய்வு செய்து அறிவித்திட வேண்டும். இதன்பின் உள்ள கடன் நிலுவையை ஒத்தி வைத்திட வேண்டும். எந்த நிபந்தனையும் இல்லாமல் புதிய பயிர்க்கடன் வழங்கிட நடவடிக்கை எடுத்திட வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

* இதுக்கு மேல முட்டு கொடுக்க முடியாது: விஜய்க்கு எதிராக தவெக வேட்பாளர் போர்க்கொடி

திருவண்ணாமலை தொகுதியில் தவெக வேட்பாளராக போட்டியிட்டு தோல்வி அடைந்த அருள் ஆறுமுகம், தனது முகநூல் பக்கத்தில் நேற்று பரபரப்பான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களே, நீங்கள் வாக்குறுதி தரவில்லை உத்தரவாதம் கொடுத்தீர்கள் என்பதை மறக்க வேண்டாம். உடனடியாக சிறு குறு விவசாயிகளின் முழு கடன்களை தள்ளுபடி செய்யுங்கள் மற்றும் பெரு விவசாயிகளுக்கு 50 சதவீதம் கடன் தள்ளுபடி செய்யுங்கள். உங்களுக்கு விவசாயத்தை பற்றி தெரியாது.

ஐஏஎஸ்களின் பேச்சை கேட்டு இப்படி தவறான முடிவு எடுக்க கூடாது. இது தவெகவின் ஒட்டுமொத்த நம்பிக்கையையும் சீர்குலைத்து விடும். தேர்தல் வாக்குறுதிப்படி செயல்படுத்துங்கள். தமிழக அரசிடம் பணம் இல்லை என்றால் முதலில் வாக்குறுதிபடி அறிவிப்பு கொடுத்துவிட்டு தேதி வாரியாக இரண்டு மூன்று கட்டங்களாக விவசாய கடன்களை தள்ளுபடி செய்திருக்கலாம். இது விவசாயிகளிடம் பெரும் எதிர்மறை எண்ணத்தையே உருவாக்கும். தமிழக அரசே உடனடியாக உங்கள் அறிவிப்பை மாற்றி வாக்குறுதிப்படி செயல்படுத்துங்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இது, பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

திருவண்ணாமலை தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட முன்வராததால், உழவர் உரிமை இயக்கம் எனும் பெயரில் அமைப்பை நடத்தி வந்த அருள் ஆறுமுகம் என்பவர், திருவண்ணாமலை தொகுதி தவெக வேட்பாளராக நிறுத்தப்பட்டார் என்பதும், தவெக உட்கட்சி கோஷ்டி பூசல் குறித்து சமீபத்தில் இவர் அதிரடியாக கருத்துக்களை தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

* கடன் தள்ளுபடியால் எந்த பயனும் இல்லை: விஜய்க்கு இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி. கடிதம்

இந்திய கம்யூனிஸ்ட் எம்பி கே.சுப்பராயன் முதல்வர் விஜய்க்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘‘தமிழ்நாடு அரசின் விவசாய கடன் தள்ளுபடி அறிவிப்பால் விவசாயிகளுக்கு எந்தவித பயனும் இல்லை. தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டபடி கடன்கள் ரத்து செய்யப்படாததால் ஏமாற்றமடைந்த விவசாயிகள் நாடெங்கும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, 5 ஏக்கர் மற்றும் அதற்கு கீழ் நிலம் வைத்துள்ள விவசாயிகளின் அனைத்து கடன்களையும் தேர்தல் வாக்குறுதிப்படி முழுமையாக ரத்து செய்ய வேண்டும். அதற்கு மேலே கடன் உள்ள விவசாயிகளின் கடன்களில் 50 சதவீத தொகையை தள்ளுபடி செய்ய வேண்டும்’’ என வலியுறுத்தி உள்ளார்.