வாடிகன் சிட்டி: புதிய போப் ஆண்டவராக தேர்வு செய்யப்பட்டுள்ள போப் 14ம் லியோ வரும் 18ம் தேதி நடைபெறும் திருப்பலியில் பதவி ஏற்பார் என வாடிகன் தெரிவித்துள்ளது. கத்தோலிக்க திருச்சபை தலைவராக இருந்த போப் ஆண்டவர் பிரான்சிஸ் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 21ம் தேதி காலமானார். போப் ஆண்டவரை தேர்வு செய்வதற்கான கர்தினால்களின் ரகசிய கூட்டம் கடந்த 7ம் தேதி நடந்தது. இதில் உலகெங்கும் உள்ள கத்தோலிக்க கர்தினால்கள் 133 பேர் கலந்து கொண்டனர். புதிய போப்பை தேர்வு செய்ய நடைபெறும் ரகசிய வாக்கெடுப்பில் மூன்றில் இரண்டு பங்கு கர்தினால்களின் ஆதரவு தேவை.
முதல்கட்ட வாக்குப்பதிவில் பெரும்பான்மை வாக்குகள் யாருக்கும் கிடைக்கவில்லை. புகைப்போக்கியில் இருந்து கரும்புகை வெளியேறி இதை உணர்த்தியது. தொடர்ந்து நேற்றுமுன்தினம் இரவு நடந்த வாக்கெடுப்பில் புதிய போப்பாக அமெரிக்காவை சேர்ந்த கர்தினால் ராபர்ட் பிரான்சிஸ் பிரிவோஸ்ட் தேர்வு செய்யப்பட்டார். அவர் போப் 14ம் லியோ என அழைக்கப்படுவார் என கர்தினால்கள் அறிவித்தினர். இந்நிலையில் மே 18ம் தேதி நடைபெற உள்ள திருப்பலியில் போப் 14ம் லியோ பதவி ஏற்க உள்ளார். இதைத்தொடர்ந்து 21ம் தேதி நடைபெறும் முதல் திருப்பலிக்கு போப் 14ம் லியோ தலைமை தாங்குவார் என வாடிகன் தெரிவித்துள்ளது.