புதுடெல்லி: புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின் கீழ் 635 இணையதள முகவரிகள் முடக்கப்பட்டதாக ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறினார். நாடாளுமன்ற மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரையன் கேட்ட கேள்விக்கு, ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், ‘இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, இந்தியாவின் பாதுகாப்பு, ஒன்றிய அரசின் பாதுகாப்பு, வெளிநாடுகளுடனான நட்பு ரீதியான உறவுகள் போன்றவற்றிக்கு எதிராக செயல்பட்ட இணைய தளங்கள், யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டு வருகின்றன.
கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரியில் கொண்டு வரப்பட்ட புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின் கீழ், தவறான தகவல்களைப் பரப்புதல், நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துதல் போன்ற செயல்களை செய்த யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 2021 – 2022ம் ஆண்டுக்கு இடையில் 78 யூடியூப் செய்தி சேனல்கள், 560 யூடியூப் இணைப்புகள் தடை செய்யப்பட்டன. கடந்த 2021 டிசம்பர் முதல் 10 இணையதளங்கள் உட்பட 635 யுஆர்எல்கள் (இணையதள முகவரிகள்) முடக்கப்பட்டன’ என்றார்.