கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009 இந்தியாவில் 6 வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாய கல்வியை அளிப்பதற்கான சட்டமாகும். 2009ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதி ஜனாதிபதியால் ஒப்புதல் பெறப்பட்டு இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் அறிவிக்கப்பட்டது.
இச்சட்டத்தின் மூலம் சமூகத்திலும், பொருளாதாரத்திலும் பின் தங்கிய மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு அவர்களுக்கான முழு கல்விக் கட்டணத்தையும் அரசே ஏற்கிறது. பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை எல்கேஜி முதல் நடைபெற்று வரும் பள்ளிகளில் எல்கேஜி வகுப்பிலும், 1ம் வகுப்பு முதல் நடைபெற்று வரும் பள்ளிகளில் 1ம் வகுப்பிலும் விண்ணப்பித்து சேர்க்கலாம். இத்திட்டத்தின் கீழ் பள்ளியில் சேர்க்கப்படும் மாணவர்களிடம் எந்த விதமான கட்டணமும் பெறக்கூடாது.
இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தில் 7,738 தனியார் பள்ளிகளில் சுமார் 85 ஆயிரம் முதல் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் வரை பயன்பெற்று வந்தனர். இத்திட்டம் தொடங்கி 14 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் நிலையில் வருடந்தோறும் ஏப்ரல் மாதம் தொடங்கி மே மாதம் வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதியான மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை நடைபெறும்.
ஆனால், இந்தாண்டு தமிழகத்தில் ஏப்ரல் மாதம் வெளியிடப்பட வேண்டிய கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு தற்போது வரை (மே மாதம் முடியும் தருவாயிலும்) வெளியிடப்படவில்லை. ஒன்றிய அரசின் புதிய கல்வி கொள்கையை ஏற்காததால், சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு தர வேண்டிய 2,291 கோடி ரூபாய் கல்வி நிதியை ஒன்றிய அரசு நிறுத்தி வைத்திருப்பது இந்த தாமதத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர், கல்வியாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து ஆசிரியரும், கல்வியாளருமான மூர்த்தி கூறுகையில், “6 முதல் 14 வயதுடைய அனைவருக்கும் கட்டாய கல்வி கிடைக்கும் வகையில் கொண்டு வரப்பட்டது கட்டாய கல்வி உரிமை சட்டம். இதன்மூலம், ஆண்டுதோறும் தமிழகத்தில் மட்டும் லட்சக்கணக்கான மாணவ, மாணவிகள் பயன் பெற்று வந்தனர். இந்தாண்டு இன்னும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர்களை சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இதற்கு ஒன்றிய அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை நிறுத்தி வைத்திருப்பது முதன்மை காரணம். இத்திட்டத்தின் கீழ் 60 சதவீத நிதியை ஒன்றிய அரசும், 40 சதவீத நிதியை மாநில அரசும் வழங்க வேண்டும்.
ஆனால், புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டுமே தமிழகத்திற்கான நிதியை ஒதுக்கீடு செய்ய முடியும் என ஒன்றிய அரசு செயல்படுவதன் காரணமாக தமிழகத்திற்கான கல்வி நிதி முற்றிலுமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு கலாசாரம் உள்ளிட்ட பாகுபாடுகள் உள்ள நிலையில் நாடு முழுவதும் ஒரே கல்வி என்ற பெயரில் தனது ஆசையை திணிக்கும் முயற்சியை ஒன்றிய அரசு செயல்படுத்த துடித்து அதற்கான கல்வி நிதியை நிறுத்தி வைத்திருப்பதால் லட்சக்கணக்கான மாணவர்களின் கல்வி உரிமை பாதிக்கப்பட்டுள்ளது. இதனை ஒன்றிய அரசு கைவிட்டு தமிழகத்திற்கான நிதியை விரைவில் ஒதுக்கீடு செய்யும் பட்சத்தில் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் லட்சக்கணக்கான மாணவர்கள் பயன் பெற முடியும்” என்றார்.
* கல்வியில் முன்னோடி மாநிலம் தமிழ்நாடு
தமிழக அரசின் பள்ளி கல்வித்துறையின் பல்வேறு சிறப்பு திட்டங்கள் காரணமாக இடைநிற்றல் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல், மேல்நிலை வகுப்பு முடித்த மாணவ, மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கை உறுதி செய்யப்பட்டு வருகிறது. நாட்டிலேயே உயர்கல்வி சேர்க்கை அதிகம் உள்ள மாநிலமாக தமிழகம் முதல் இடத்தில் இருந்து வருகிறது.
நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ் புதல்வன் உள்ளிட்ட திட்டங்களால் உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. பல்வேறு வகைகளில் கல்வியில் முன்னோடி மாநிலமாக உயர்ந்து வரக்கூடிய நிலையில் ஒன்றிய அரசின் இந்த பாராமுகம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அனைவருக்கும் கட்டாய கல்வி திட்டத்தின் மூலம் தமிழகத்தில் 7,738 தனியார் பள்ளிகளில் சுமார் 85 ஆயிரம் முதல் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் வரை பயன்பெற்று வந்தனர்.
தமிழகத்தில் ஏப்ரல் மாதம் வெளியிடப்பட வேண்டிய கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு தற்போது வரை வெளியிடப்படவில்லை.தமிழகத்திற்கு தர வேண்டிய 2,291 கோடி ரூபாய் கல்வி நிதியை ஒன்றிய அரசு நிறுத்தி வைத்திருப்பது இந்த தாமதத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது.
* ரூ.617 கோடி ஒதுக்க வேண்டும்
கல்வியறிவில் தமிழகம் முன்னோடி மாநிலமாக இருந்து வருகிறது. இச்சூழலில் தமிழகத்தில் கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009ஐ முடக்கி வைக்கும் வகையில் ஒன்றிய அரசு கல்வி நிதியை தராமல் இருக்கும் செயல்பாட்டை திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் தொடர்ந்து எதிர்த்து வருகின்றன. இந்நிலையில், இத்திட்டத்தின் கீழ் மட்டும் ஒன்றிய அரசு தமிழகத்திற்கு ரூ.617 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
* 2021 முதல் நிதி ஒதுக்காதது ஏன்? ஒன்றிய அரசுக்கு ஐகோர்ட் கேள்வி
கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு இதுவரை துவங்கவில்லை. எனவே உடனடியாக மாணவர் சேர்க்கையை தொடங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறி, கோவையைச் சேர்ந்த மறுமலர்ச்சி இயக்கம் என்ற அமைப்பின் நிர்வாகி வே.ஈஸ்வரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் வி.லட்சுமி நாராயணன் அடங்கி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், கல்வி உரிமைச் சட்டத்தில் 25 சதவீத இட ஒதுக்கீட்டு மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தில் 60 சதவீதம் தொகையை ஒன்றிய அரசும், 40 சதவீதம் தொகையை மாநில அரசும் வழங்க வேண்டும். ஒன்றிய அரசு, கடந்த 2021ம் கல்வியாண்டு முதல் எந்த நிதியும் ஒதுக்கவில்லை. இதனால் 100 சதவீதம் தொகையை மாநில அரசு தான் வழங்கியுள்ளது.
மாணவர்களின் கல்வி விஷயத்தில் அக்கறை கொண்டுள்ள மாநில அரசு, ஒன்றிய அரசு நிதி ஒதுக்காவிட்டால் என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து முடிவெடுக்க மே 28ம் தேதி கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு நிதி ஒதுக்காததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தாக்கல் செய்துள்ளது என்றார். இதைக்கேட்ட நீதிபதிகள், என்ன காரணத்துக்காக நிதி ஒதுக்கப்படவில்லை. கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், 25 சதவீத இட ஒதுக்கீட்டு இடங்களுக்கு தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டிய நிதி குறித்த விவரங்களை சமர்ப்பிக்கும்படி ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டனர்.