Friday, April 19, 2024
Home » சென்னை விமான நிலையத்தில் இருசக்கர வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடு அமல்: அரசு துறை ஊழியர்களுக்கும் விதிவிலக்கு இல்லை

சென்னை விமான நிலையத்தில் இருசக்கர வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடு அமல்: அரசு துறை ஊழியர்களுக்கும் விதிவிலக்கு இல்லை

by Ranjith

மீனம்பாக்கம்: சென்னை விமான நிலையத்திற்குள் வரும் அனைத்து இருசக்கர வாகனங்களுக்கும் டோல்கேட்டில் டோக்கன் போடும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. காவல்துறை உள்ளிட்ட அரசு துறைகள் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு பிரிவு, விமான நிலைய ஊழியர்களுக்கும் விதிவிலக்கு அளிக்கப்படவில்லை. சென்னை விமான நிலையத்தில் 6 அடுக்கு நவீன வாகன நிறுத்தம், கடந்த டிசம்பர் 4ம் தேதியில் இருந்து செயல்படுகிறது. இந்த மல்டி லெவல் கார் பார்க்கிங், சென்னை விமான நிலைய வளாகத்திற்குள் கிழக்கு, மேற்கு என்று 2 பிரிவுகளாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் நிறுத்தங்களில் 2,150 கார்கள், 400 இருசக்கர வாகனங்கள் நிறுத்த முடியும்.

சென்னை விமான நிலைய வளாகத்துக்குள் நுழையும் இடத்தில், டோல்கேட் அமைக்கப்பட்டு, உள்ளே வரும் கார்கள் ஸ்கேன் செய்யப்பட்டு, டோக்கன் கொடுக்கும் முறை கடந்த ஆண்டு டிசம்பர் 4ம் தேதியிலிருந்து அமலுக்கு வந்தது. அந்த டோக்கனில் வாகனத்தின் எண், உள்ளே நுழையும் நேரம் ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்கும். வெளியில் செல்லும்போது, அங்கு அமைக்கப்பட்டுள்ள டோல்கேட்டில், டோக்கனை பார்த்து, எவ்வளவு நேரம் வாகனம் விமான நிலையத்திற்குள் நின்றதோ அதற்கேற்ப கட்டணங்களை வசூல் செய்து விட்டு வாகனங்களை அனுப்பி வருகின்றனர்.

அதே நேரத்தில் இருசக்கர வாகனங்கள் உள்ளே நுழையும் போது டோக்கன் வாங்க வேண்டியது இல்லை. அவர்கள் நேரடியாக உள்ளே சென்று விட்டு பார்க்கிங்கில் நிறுத்திக் கொள்ளலாம். வெளியே செல்லும்போது அப்பகுதியில் நிற்கும் பார்க்கிங் ஊழியர்கள், இருசக்கர வாகனங்களிடம் கட்டணங்களை வசூலித்து கொள்வார்கள். காவல்துறை, மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், பத்திரிகையாளர், அரசு துறையினர், விமான நிலைய ஊழியர்கள் போன்றவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படவில்லை. இதுதான் நேற்று முன்தினம் வரை சென்னை விமான நிலையத்தில் நடைமுறையில் இருந்தது.

ஆனால், நேற்று அதிகாலையில் இருந்து, சென்னை விமான நிலையத்திற்குள் நுழையும் இருசக்கர வாகனங்கள் அனைத்திற்கும், புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து இருசக்கர வாகனங்களுக்கும் டோல்கேட்டில் இருசக்கர வாகனங்கள் செல்வதற்கு என்று தனியாக அமைக்கப்பட்டுள்ள வழியில் தான் செல்ல வேண்டும். அங்கு பணியில் இருக்கும் ஊழியர், இருசக்கர வாகனத்தின் நம்பர் பிளேட்டை ஸ்கேன் செய்து, டோக்கன் கொடுக்கிறார். அதன் பின்புதான் இருசக்கர வாகனம் உள்ளே செல்ல முடிகிறது. இருசக்கர வாகனங்களில் வருபவர்கள், தங்கள் பணிகள் முடிந்து, விமான நிலையத்தை விட்டு வெளியேறும் வழியில், டோல்கேட் ஊழியர்கள், இருசக்கர வாகனங்கள் எவ்வளவு நேரம் உள்ளே நிறுத்தப்பட்டதோ, அதற்கு ஏற்ப பார்க்கிங் கட்டணம் வசூலித்து விட்டு அனுப்புகின்றனர்.

முதல் ஒரு மணி நேரத்திற்கு ரூ.20ல் தொடங்கி, 10 மணி நேரத்தில் இருந்து 24 மணி நேரம் வரை ரூ.90 வரை பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும் இதில் காவல்துறை, மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், விமான நிலைய ஊழியர்கள், பத்திரிகையாளர்கள், அரசு துறையை சார்ந்தவர்கள் யாருக்கும் விதிவிலக்கு இல்லை. அனைவருக்குமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. உள்ளே நுழையும் போது கொடுக்கும் டோக்கனை தவறவிட்டவர்களுக்கு, வெளியேறும்போது, ரூ.150 அபராதம் வசூலிக்கப்படுகிறது.

You may also like

Leave a Comment

9 + 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi