‘‘பினாமியை நம்பி பல கோடி சொத்து சேர்த்து முதலீடு செய்ததை திரும்ப வாங்க முடியாமல் திண்டாடிக்கிட்டு தவிக்கிறாராமே அதிகாரி ஒருத்தர்..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘புதுச்சேரியில் லஞ்ச வழக்கில் தலைமை பொறியாளர், உதவி பொறியாளரை சிபிஐ கைது செய்த சம்பவத்தை தொடர்ந்து மற்ற துறை அதிகாரிகள் எல்லாம் கலக்கத்தில் இருக்காங்களாம்.. இதற்கிடையே, பணம் அதிகம் புரளும் துறையின் தலைமை பொறுப்பில் உள்ள கொக்கி குமார் புலம்பி வர்றாராம்.. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து வம்பில் மாட்டிக்கொள்ள நேரிடும் என்பதால், சம்பாதித்த பணத்தை பினாமி பெயரில் மனையாக வாங்கி போட்டாராம்.. பினாமியை நம்பி பலகோடி முதலீடு செய்திருக்கிறாராம்.. ஆனால் அந்த நல்லவரு, இப்போ இடத்தை கொடுக்க மறுக்கிறாராம்.. வேறு ஒருவர் பெயரில் எழுதக் கேட்டும் மறுக்கிறாராம்..
‘உனக்கு ஏதாவது பாத்து செய்யுறேன்’ என்கிற அளவுக்கு இறங்கி வந்தும் கல் நெஞ்ச பினாமி மறுத்து வருவதால் குமாரு ரொம்பவும் மன உளைச்சலில் தவிக்கிறாராம்.. இதனால் என்ன செய்வதென தெரியாமல் முழித்து வருகிறாராம்.. வெளியேயும், சொல்ல முடியாமல், உள்ளேயும் வைத்துக்கொள்ள முடியாமல் விசும்பிக்கிட்டிருக்கிறாராம்.. இப்பிரச்னையை எப்படியாவது முடித்துவிடலாம் என நினைத்து 3 நாட்களாக லீவு போட்டு முயற்சித்தும் பிரச்னை முடியலையாம்.. அடுத்து என்ன செய்யலாம்னு யோசிச்சு வர்றாராம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘குக்கர் கட்சியில் இருக்கும் செயல்படாத மாவட்ட செயலாளர்களால் தொண்டர்கள் கடும் அதிருப்தியில் இருக்காங்களாமே..’’ எனக் கேட்டார் பீட்டர் மாமா.‘‘மன்னர் மாவட்டத்தில் குக்கர் கட்சி மாவட்ட செயலாளர்கள் செயல்படாமல் இருக்காங்களாம்.. இதன் காரணமாக, நிர்வாகிகள் என்ன செய்வது தெரியாமல் புலம்பிக்கிட்டு வர்றாங்களாம்..
கட்சியில் கடந்த தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தங்கள் சொந்த பணத்தை பல லட்சங்கள் செலவு செய்திருந்தார்களாம்.. வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு மற்ற கட்சியினர் இப்பவே தயாராகி வர்றாங்க.. ஆனால் குக்கர் கட்சியில் அப்படி எந்த தேர்தல் பணியும் நடப்பதுபோல் தெரியவில்லையாம்.. தலைமையும் இதை கண்டுகொள்வதில்லை என ஒன்றிய நிர்வாகிகள், தொண்டர்கள் புலம்புகிறாங்க.. இதுகுறித்து மாவட்ட செயலாளர்களிடம் நிர்வாகிகள் கேட்டால், நாங்கள் என்ன செய்வது தலைமையிடத்திலிருந்து எந்த உத்தரவும் வரவில்லை. தேர்தல் பணி செய்ய எங்களிடம் பணமும் இல்லை என தெரிவிக்கிறாங்களாம்.. இதனால் திக்குமுக்காடி போய் உள்ள குக்கர் கட்சி நிர்வாகிகள் தலைமைக்கு கடிதம் மூலம் கட்சியில் உள்ள நிலை குறித்து விரிவாக கடிதம் எழுதி அனுப்ப திட்டமிட்டு இருக்காங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘புதிய கட்சி தொடங்கிய நேரத்தில் இருந்த உற்சாகம் இல்லாததும், லீடர் ஏசி ரூமை விட்டு வெளியே வராததும் நிர்வாகிகளை குழப்பத்தில் தள்ளியிருக்காமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘புதிய பார்ட்டி தொடங்கிய நேரத்தில் இருந்த உற்சாகம் ஆக்டர் கட்சி விசிறிகளிடம் இப்போது இல்லையாம்.. பார்ட்டி ஆரம்பிச்சு வருஷம் கடந்த நிலையில் ரெண்டு முறை மட்டுமே பப்ளிக் மத்தியில் தலைகாட்டி இருக்கிறாராம் லீடரு.. அதேபோல் கூட்டணி என்று தூண்டில் போட்டு அவர் வீசிய வலையில் அனுபவம் வாய்ந்த பார்ட்டிகள் யாரும் சிக்கலையாம்.. இலையும், தாமரையும் இணையாது. இலை எப்படியும் நம்ம கூடத்தான் வரும் என்ற நம்பிக்கையும் வீணாகிப் போச்சாம்.. இதற்கிடையில் தாமரையின் ரிட்டயர்டு பார்ட்டிகள் சிலரும் ரெய்டு, கிய்டுன்னு பயம் காட்டிக்கிட்டு இருக்காங்களாம்..
இப்படிப்பட்ட நிலையில் இதையெல்லாம் தாண்டி நம்ம லீடரு என்ன செய்யப்போறாரு என்ற கேள்வி புதிய நிர்வாகிகளிடம் பலமா ஓடிக்கிட்டு இருக்காம்.. பல்லாண்டு அனுபவம் பெற்ற பொலிடிக்கல் பார்ட்டிகள் எல்லாம் பப்ளிக் பிரச்னைக்கு குரல் கொடுத்து தினமும் இருப்பை தக்கவச்சிக்கிட்டு இருக்காங்க.. நம்ம லீடரோ, ஏசி ரூமை விட்டு வெளியே வருவதே பெருசா இருக்கு.. இப்படியே போனால் நம்மளோட பொலிடிக்கல் எதிர்காலம் என்னவாகுமோ என்ற குழப்பம்தான் அவர்களின் உற்சாகம் இழந்துபோக காரணமாம்.. இதற்கிடையே வேறு பார்ட்டிகளில் இணையவும் சில நிர்வாகிகள் ஆயத்தமாகி வர்றாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.‘‘மாவட்டத்துல மலராத பார்ட்டிக்கு எந்த தொகுதியும் விடக்கூடாதுன்னு இலை பார்ட்டிகள் இப்பவே தலைமைக்கு பிரஷர் கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்களாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘இலை பார்ட்டியும், மலராத பார்ட்டியும் கூட்டணி சேர்ந்த நாள்ல இருந்தே இலை கட்சியின் இரண்டாம், மூன்றாம் கட்ட தலைவர்கள்ல இருந்து அடிமட்ட தொண்டர்கள் வரைக்கும் ஒருவித அதிருப்தியே நிலவி வர்ற சூழல் இருந்து வருது.. இப்ப புதிசா இன்னொரு பூகம்பம் ஒன்னும் வெயிலூர் மாவட்டத்துல இருந்து கிளம்பியிருக்குதாம்.. பொருந்தா கூட்டணி அமைச்சிட்டாங்க, ஆனா, 2026 சட்டமன்ற தேர்தல்ல வெயிலூர் மாவட்டத்துல இருக்குற 5 தொகுதிகள்லயும் நாமதான் நிற்கணும், இதுல மலராத கட்சிக்கு பங்கு கொடுக்கக்கூடாது. ஒருவேளை நம்ம கூட்டணியில் மேங்கோ பார்ட்டி சேர்ந்தா அந்த பார்ட்டிக்கு அணையான தொகுதியை கொடுக்கலாம்.. மலராத கட்சி மட்டும் நம்ம வெயிலூர் மாவட்டத்துக்கு வேணாம்னு தங்கள் குரலை தலைமையிடம் உயர்த்தியிருக்குறாங்களாம் இலை பார்ட்டிகள். நாம அதிக தொகுதியில நின்னாதான் சரிபட்டு வரும்..
இல்லைன்னா, கூட்டணி தர்மம், அது, இதுன்னு சொன்னா, அந்த கட்சி நிற்கும் தொகுதி பூத்துல நாம நிக்கக்கூடாதுன்னு சொல்லி வர்றாங்களாம்.. இதுக்கு பின்புலமாக இருக்குறது மிஸ்டர் பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவரும், கோணம் பாதியான ஏரியாவை சேர்ந்த முக்கிய இலை பிரமுகர்கள் தான்னு சொல்றாங்க.. தொகுதி பிரிக்குறதுக்குள்ள, வெயிலூர் மாவட்டத்துல இலையும், மலரும் ஒரு வழி ஆகிடும்னு ஜனங்க பேசிக்கிறாங்க..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.