புதுடெல்லி: நாடாளுமன்ற புதிய கட்டிடத்தின் வடிவமைப்பு சவப்பெட்டியை நினைவு படுத்துவதாக ராஷ்ட்ரிய ஜனதா தளம் டிவிட்டரில் கருத்து தெரிவித்ததற்கு பாஜ கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. நாட்டின் புதிய நாடாளுமன்ற கட்டிடம் டெல்லியில் நேற்று புதிதாக திறக்கப்பட்டது. லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி) நேற்று டிவிட்டரில் முதலில் சவப்பெட்டி ஒன்றின் படத்தையும், அடுத்ததாக பதிய நாடாளுமன்ற கட்டிட படத்தையும் வைத்து, இது என்ன? என்று பதிவிட்டிருந்தது. இது குறித்து பீகார் மாநில பாஜ ஷெசாத் பூனாவாலா கூறுகையில், புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் கட்டிடக்கலையை சவப்பெட்டிக்கு ஒப்பிட்ட ஆர்.ஜே.டி கட்சியின் டிவிட் அருவெறுப்பானது. முக்கோணம் வடிவம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சவப்பெட்டி அறுகோணம், அதாவது ஆறு பக்கங்களை கொண்டது என டிவிட்டரில் சாடினார். பாஜவின் மற்றொரு செய்தி தொடர்பாளர் கவுரவ் பாட்டியா கூறுகையில், இந்த சவப்பெட்டி ஆர்ஜேடிக்கானது. பீகார் மக்கள் 2024ல் அந்த கட்சியை சவப்பெட்டிக்குள் அனுப்புவார்கள். புதிய நாடாளுமன்றம் நாட்டுக்கு சொந்தம் என்றார்.