Sunday, July 13, 2025
Home செய்திகள்Banner News புதிய விரிவான மினிபஸ் திட்டம்- 2024ன் படி புதிய மினி பஸ் சேவையினை தொடங்கி வைத்தார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்

புதிய விரிவான மினிபஸ் திட்டம்- 2024ன் படி புதிய மினி பஸ் சேவையினை தொடங்கி வைத்தார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்

by MuthuKumar

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (16.6.2025) தஞ்சாவூர், மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில், புதிய விரிவான மினி பஸ் திட்டம்-2024ன் படி பேருந்து வசதி கிடைக்கப் பெறாத இடங்களில் வசிக்கும் மக்கள் பயன்பெறும் வகையில் புதிய மினி பஸ் சேவையினை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் கடந்த 1997-ஆம் ஆண்டு பேருந்து வசதி பெறாத குக்கிராமங்களில் வாழும் மக்கள் பேருந்து வசதி பெறும் நோக்கில் மினிபஸ் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, மாவட்டத்திற்கு 250 மினிபஸ் அனுமதிச்சீட்டுகள் என்ற அடிப்படையில், பேருந்துகள் இயக்கப்படாத (Un-Served) வழித்தடத்தில் 16 கி.மீ. மற்றும் பேருந்துகள் இயக்கப்படும் வழித்தடத்தில் (Served) 4 கி.மீ., என மொத்தம் 20 கி.மீ. என்ற அளவில் வழித்தடம் நீட்டிப்பு செய்து மினிபஸ் இயக்கப்பட்டு வந்தன.

இந்த அரசு பொறுப்பேற்றப்பின்னர், இத்திட்டத்தை விரிவாகவும், முறையாகவும் நடைமுறைப்படுத்த பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துத் துறை சார்ந்த பல்வேறு தரப்பினர் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் அரசால் ஆய்வு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் புதிய விரிவான மினிபஸ் திட்டம்-2024 கடந்த 23.01.2025 அன்று வெளியிடப்பட்டது. பின்னர், மீண்டும் அத்திட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு கடந்த 28.4.2025 அன்று வெளியிடப்பட்டது.

புதிய விரிவான மினிபஸ் திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்
நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட குக்கிராமங்களை நகரப் பகுதிகளுடன் இணைக்கும் விதமாக, அதிகபட்ச வழித்தட தூரத்தினை 25 கி.மீ. ஆக உயர்த்தி வழித்தட நீட்டிப்பு செய்து, அதில் பேருந்து இயங்காத வழித்தடங்களில் குறைந்தபட்சம் 65 சதவிகிதம் என இயக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.மேலும், இத்திட்டத்தின்படி மினிபஸ்கள் பேருந்து நிறுத்தங்கள் / பேருந்து நிலையங்களில் இருந்து புறப்படவும், நிறுத்தவும் வசதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் தற்போது மினி பஸ் இயக்கி வருபவர்கள் புதியத் திட்டத்திற்கு மாற்றம் (Migration) பெற்று இயக்கிடவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும், இத்திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 2094 புதிய வழித்தடங்கள் மற்றும் புதிய திட்டத்திற்கு மாறுதல் செய்யப்பட்ட 1009 வழித்தடங்கள் என மொத்தம் 3,103 வழித்தடங்கள் அடையாளம் கண்டறியப்பட்டு செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டு மக்களுக்கு பேருந்து இயக்கப்படாத 25,708 கி.மீ. நீளத்திற்கு புதிதாக பேருந்து வசதி கிடைக்கப்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தமிழ்நாடு அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருச்சி சிவா, கல்யாண சுந்தரம், முரசொலி, சட்டமன்ற உறுப்பினர்கள் டி.கே.ஜி.நீலமேகம், என்.அசோக்குமார், துரை.சந்திரசேகரன் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார், இ.ஆ.ப., போக்குவரத்துத் துறை ஆணையர் / முதன்மைச் செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு, இ.ஆ.ப., தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம், இ.ஆ.ப., தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi