Tuesday, May 20, 2025
Home செய்திகள் ஊட்டிக்கு செல்பவர்களுக்கு புது சிக்கல் நெட்வொர்க் பிரச்னையால் இ-பாஸ் கிடைக்காமல் தவிப்பு

ஊட்டிக்கு செல்பவர்களுக்கு புது சிக்கல் நெட்வொர்க் பிரச்னையால் இ-பாஸ் கிடைக்காமல் தவிப்பு

by Lakshmipathi

*சுற்றுலா பயணிகள் ஊர் திரும்பும் அவலம்

ஊட்டி : நீலகிரி மாவட்ட எல்லைக்குள் இ-பாஸ் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், பாதி தூரம் மாவட்டத்திற்குள் வந்த பிறகு இ-பாஸ் கிடைக்காவிட்டால், வெளிமாநில மற்றும் வெளிமாவட்ட சுற்றுலா பயணிகள் மீண்டும் ஊர் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், மசினகுடி, கெத்தை வனப்பகுதியில் நெட்வொர்க் பிரச்னையால் இ-பாஸ் பெறுவதில் புது சிக்கல் நிலவுகிறது.

நீலகிரி மாவட்டத்திற்கு வருவதற்கு கடந்த ஆண்டு மே மாதம் முதல் இ-பாஸ் நடைமுறை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில், தமிழ்நாடு அரசு கொண்டு வந்தது. நீலகிரி மாவட்டம் அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடக மாநில எல்லையில் அமைந்துள்ளது.

இதனால், தினமும் இந்த 2 மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்குள் (நீலகிரி வழியாக) வரும் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் கட்டாயம் இ-பாஸ் பெற்று வர வேண்டிய நிலை உள்ளது.

அதேபோல், தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி, வணிகர்கள் மற்றும் பல்வேறு சுக, துக்க நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வரும் பொதுமக்களும் தற்போது கட்டாயம் இ-பாஸ் பெற்று வர வேண்டியுள்ளது.

கடந்த ஓராண்டாக இந்த இ பாஸ் நடைமுறையால், சுற்றுலா பயணிகளை காட்டிலும் பல்வேறு தேவைகளுக்காக வெளிமாவட்டங்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு வரும் வணிகர்கள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது, நீலகிரி மாவட்டத்திற்கு வார நாட்களில் 6 ஆயிரம் வாகனங்கள், வார இறுதி நாட்களில் 8 ஆயிரம் வாகனங்கள் மட்டுமே வரலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனால், 6 ஆயிரம் வாகனங்கள் மட்டுமே வந்து செல்ல முடிகிறது. மற்ற வாகனங்கள் மாநில மற்றும் மாவட்ட எல்லைகளில் இருந்து திரும்பி சென்றன.

இதனால், அவர்கள் ஊட்டி வர முடியாது என்ற ஏக்கம் இருந்த போதிலும், தங்களது சொந்த ஊர்களுக்கோ அல்லது வேறு சுற்றுலா தலங்களுக்கோ திரும்பி சென்றனர். ஆனால், தற்போது நீலகிரி மாவட்ட நிர்வாகம் 5 இடங்களில் மட்டுமே இ-பாஸ் சோதனை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளது.

அதன்படி, கல்லாறு, குஞ்சப்பனை, கெத்தை, மசினகுடி, மேல் கூடலூர் ஆகிய 5 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, சோதனை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளது. இந்த 5 சோதனை சாவடிகளில் கல்லாறு தவிர மற்ற அனைத்தும் மாவட்டத்திற்குள் வந்து விடுகிறது.

இதனால், நீலகிரி மாவட்டத்திற்கும் பாதி தூரம் வந்த பின்னர், இ-பாஸ் கிடைக்கவில்லை என்றால் திரும்பி செல்ல வேண்டிய நிலை உள்ளது. இது ஒரு புறம் இருக்க கெத்தை சோதனை சாவடி அடர்ந்த வனப்பகுதியின் நடுவே அமைந்துள்ளது. இங்கு பெரும்பாலான செல்போன்களின் நெட்வொர்க் கிடைப்பதில்லை.

இதனால், அங்கு வந்து இ-பாஸ் போடுவதற்கு முடியாமல் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், மசினகுடியிலும் நெட்வொர்க் பிரச்னை உள்ளது.

எனவே, ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி மாநில எல்லைகள் மற்றும் மாவட்ட எல்லைகளிலேயே இ-பாஸ் சோதனை சாவடிகள் அமைக்க வேண்டும். மேலும், அனைத்து செல்போன் நெட்வொர்க் உள்ள இடங்களில் சோதனை சாவடிகளை அமைக்க முன் வர வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கூடலூர்: மசினகுடி வழியாக ஊட்டி செல்லும் வாகனங்களை கண்காணிக்க மசினகுடி காவல் நிலையத்தை ஒட்டிய பகுதியில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

கூடலூர், பந்தலூர் பகுதிகளில் தமிழகம் மற்றும் கர்நாடக எல்லை பகுதிகளில் 6 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட இ-பாஸ் பரிசோதனை தற்போது 2 இடங்களாக குறைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே எல்லை பகுதிகளில் நடத்தப்பட்ட இ-பாஸ் சோதனையின் போது கேரளா, கர்நாடகாவில் இருந்து கூடலூர், பந்தலூர் வழியாக ஊட்டிக்கு செல்லாமல் மைசூர் மற்றும் வயநாட்டுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களும், உள்ளூர் பகுதியில் உள்ள உறவினர்களின் வீடுகளுக்கு மற்றும் வியாபார நிமித்தமாக வரும் வாகனங்களுக்கும் இ-பாஸ் நடைமுறை அமலில் இருந்தது. தற்போது கூடலூரை கடந்து ஊட்டிக்கு செல்லும் வாகனங்களுக்கு மட்டுமே இ-பாஸ் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi