Wednesday, December 6, 2023
Home » நெதர்லாந்தை சாய்த்து இங்கிலாந்து ஆறுதல்; பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றியுடன் நாடு திரும்புவோம்: கேப்டன் பட்லர் நம்பிக்கை

நெதர்லாந்தை சாய்த்து இங்கிலாந்து ஆறுதல்; பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றியுடன் நாடு திரும்புவோம்: கேப்டன் பட்லர் நம்பிக்கை

by Suresh

புனே: உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், புனேவில் நேற்று நடந்த 40வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து-நெதர்லாந்து மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து 50ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 339 ரன் எடுத்தது. அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 108 ரன் விளாசினார். பின்னர் களம் இறங்கிய நெதர்லாந்து 37.2 ஓவரில் 179 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. இதனால் 160 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது. 8வது போட்டியில் இது அந்த அணிக்கு 2வது வெற்றியாகும். நெதர்லாந்து 6வது தோல்வியுடன் பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது.

வெற்றிக்கு பின் இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் அளித்த பேட்டி: இந்த ஒரு வெற்றிக்காக நாங்கள் மிகவும் காத்துக் கொண்டிருந்தோம். இது எங்களுக்கு தேவைப்பட்ட ஒன்று. டேவிட் மாலன், நல்ல தொடக்கத்தை கொடுத்தார். எனினும் நடுவரிசையில் கொஞ்சம் சொதப்பினோம். இருந்தாலும் பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ் நல்ல பார்ட்னர்ஷிப்பை அமைத்துக் கொடுத்தனர். போட்டியில் எந்த நேரத்திலும் யாரேனும் ஒருவராவது பொறுப்பை உணர்ந்து ரன் அடிக்க வேண்டும் என நினைத்தோம். இன்று பென் ஸ்டோக்ஸ் செய்திருக்கிறார்.

இது போன்ற சூழலில் சிறப்பாக விளையாடக்கூடிய ஸ்டோக்ஸ் அணியில் இருப்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். இந்த தொடரில் நாங்கள் நன்றாக விளையாடவில்லை. எனினும் தொடரில் டாஸ் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. ஒருவேளை உலக கோப்பையில் ஆடுகிறோம் என்ற நெருக்கடியால் நாங்கள் சரியாக விளையாடவில்லையா என்று தெரியவில்லை. இன்று முதலில் பேட்செய்து ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றோம். ஆனால் இந்த தொடரில் டாஸ் வென்று முதலில் பேட் பலஅணிகள் கூட இதனை சரியாக செய்யவில்லை. கொல்கத்தாவில் பாகிஸ்தானுடன் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஆட்டம் இருக்கிறது. சரியான செயல் திறனை வெளிப்படுத்தி வெற்றிகரமாக இந்தியாவை விட்டு வெளியேற விரும்புகிறோம், என்றார்.

ஆட்டநாயகன் பென் ஸ்டோக்ஸ் கூறுகையில், நான் சதம் அடித்ததை விட அணி வெற்றி பாதைக்கு திரும்பி இருப்பது தான் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த உலகக்கோப்பை எங்களுக்கு மிகவும் கடினமான தொடராக அமைந்தது. இந்த ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக அமைந்தது. இன்று கடைசி வரை நின்று விளையாட வேண்டும் என் நினைத்தேன். அது போல் நடந்தது மகிழ்ச்சி. வோக்ஸ் ஒரு நல்ல ஆல்ரவுண்டர். அவர் கடந்த மூன்று ஆண்டுகளாக இங்கிலாந்து அணிக்கு சிறந்த வீரராக விளங்குகிறார். இன்று தனது திறமையை அவர் நிரூபித்திருக்கிறார், என்றார்.

தோல்வி ஏமாற்றமாக இருக்கிறது: நெதர்லாந்து கேப்டன் எட்வர்ட்ஸ் கூறியதாவது: “தோல்வி ஏமாற்றமாக இருக்கிறது. பந்துவீச்சில் சரியாக துவங்கவில்லை. இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் இறுதியில் ரன் குவித்தனர். பேட்டிங்கில் பழைய கதையே தொடர்கிறது.இது பேட்டிங் செய்ய நல்ல பிட்ச். நாங்கள் சில விஷயங்களை முயற்சி செய்த போதும் கூட இங்கிலாந்து நன்றாக பேட்டிங் செய்தது. இலக்கைத் துரத்தும்போது பவர் பிளேவில் அதிகரன் எடுக்க வேண்டும், விக்கெட்டை காக்க வேண்டும். இது குறித்து கட்டாயம் ஆலோசிப்போம். அடுத்து பெங்களூரில் இந்தியாவுக்கு எதிராக சூழ்நிலை மிகச் சிறப்பாக இருக்கும். அந்த போட்டியை எதிர்நோக்கி இருக்கிறோம், என்றார்.

ஷமிக்கு வாழ்த்து கூற முடியாது;
* இந்திய அணி உலக கோப்பை வெல்வதற்காக அனைவரையும் வாழ்த்துகிறேன். ஆனால் தனிப்பட்ட முறையில் என்னால் முகமது ஷமிக்கு வாழ்த்து கூற முடியாது. ஷமி நன்றாக விளையாடினால் அணியில் தொடர்ந்து நீடிப்பார், நன்றாக சம்பாதிப்பார் அவரால் எனது மகளுக்கு நல்ல எதிர்காலத்தை கொடுக்க முடியும். அதனால் அவருக்கு என்னால் வாழ்த்து கூற முடியாது, எனஅவரின் முன்னாள் மனைவிஹாசின் ஜஹான் தெரிவித்துள்ளார்.
* ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் டாப் ஆர்டர் பேட்டரான மெக் லானிங் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 31 வயதான அவர் ஆஸி.அணிககாக 6 டெஸ்ட், 103 ஒருநாள் மற்றும் 132 டி.20 போட்டிகளில் ஆடி உள்ளார்.
* நடப்பு உலக கோப்பையில் இதுவரை அதிக மெய்டன் ஓவர்கள் வீசியதில் இந்தியா 19 மெய்டன் ஓவர் வீசி முதலிடத்தில் உள்ளது. தென்ஆப்ரிக்கா 17, இங்கிலாந்து 14, வங்கதேசம் 12, ஆப்கன், நெதர்லாந்து, இலங்கை தலா 11 மெய்டன் ஓவர்கள் வீசி உள்ளன.
* இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா நடப்பு உலகக் கோப்பையில் வீசிய 383 பந்துகளில் 268 டாட் பால்களை வீசியுள்ளார்.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?